உலகம், அகதிகளுக்கும் குடியேற்றதாரருக்கும் ஆபத்தான இடமாக மாறி வருகிறது
மே,24,2013. மனித உரிமை மீறல்களைக் களைவதில் உலகில் காணப்படும் திறனற்ற போக்கு, அகதிகளுக்கும்
குடியேற்றதாரருக்கும் ஆபத்துக்களை அதிகரித்து வருகின்றது என்று Amnesty International
என்ற பன்னாட்டு மனித உரிமைகள் கழகம் குறை கூறியுள்ளது. “உலகின் மனித உரிமைகள் 2013”
என்ற தலைப்பில் இவ்வியாழனன்று அறிக்கை வெளியிட்டுள்ள Amnesty International, நெருக்கடிகள்
நிறைந்த இடங்களில் வாழும் அகதிகளும் குடியேற்றதாரரும் மனித உரிமை மீறல்களை அதிகமாக எதிர்நோக்குகின்றனர்
என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கோடியே 20 இலட்சம் பேர்
நாடுகளின்றி இருந்தவேளை, தற்போது உலகில் ஒரு கோடியே 50 இலட்சம் பேர் அகதிகளாகத் தங்களைப்
பதிவு செய்துள்ளனர் என்று கூறும் அவ்வறிக்கை, 21 கோடியே 40 இலட்சம் பேர் தங்களின் சொந்த
நாடுகளில் அல்லது குடியேறியுள்ள நாடுகளில் பாதுகாப்பின்றி வாழ்கின்றனர் என்றும் கூறியுள்ளது. அகதிகள்,
குடியேற்றதாரர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்கள் போர் அல்லது அடக்குமுறையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
என்றும் Amnesty International கழகத்தின் அறிக்கை கூறியுள்ளது.