"புலம் பெயர்ந்தோர் மற்றும் நாட்டுக்குள் இடம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளானோரின்
வடிவில் கிறிஸ்துவை வரவேற்றல்" – வத்திக்கான் கருத்தரங்கம்
மே,22,2013. வலுவற்றோர், அன்னியர் ஆகியோரை, திறந்த மனதுடன் வரவேற்கும் பண்பு கிறிஸ்தவ
வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்று திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். புலம்
பெயர்ந்தோர் மற்றும் பயணிகள் பணியில் ஈடுபட்டுள்ள திருப்பீட அவை, மே மாதம் 22ம் தேதி,
இப்புதன் முதல் 24ம் தேதி வெள்ளிக்கிழமை முடிய வத்திக்கானில் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில்,
அந்த அவையின் தலைவரான கர்தினால் Antonio Maria Veglio துவக்க உரையாற்றியபோது இவ்வாறு
கூறினார். ஆபிரகாம், மோசே, இயேசுவின் பெற்றோர் என்று, விவிலியத்தின் பல நூல்களில்,
நாடு விட்டு நாடு, அல்லது ஊர்விட்டு ஊர் செல்லும் பலர் கூறப்பட்டிருப்பதால், இந்தப் பிரச்சனையை
கிறிஸ்தவர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிகிறது என்று கர்தினால் Veglio எடுத்துரைத்துரைத்தார். அரசியல்,
மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளாலும், போர்களாலும் நாடு விட்டு நாடு செல்வோர், உள்நாட்டிலேயே
புலம் பெயர்ந்துள்ளோர் ஆகியோரின் எண்ணிக்கை கூடிவருவது மனித சமுதாயத்தை விழித்தெழச் செய்யவேண்டும்
என்று கர்தினால் Veglio தன் உரையில் வலியுறுத்தினார். "புலம் பெயர்ந்தோர் மற்றும்
நாட்டுக்குள் இடம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளானோரின் வடிவில் கிறிஸ்துவை வரவேற்றல்"
என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இக்கருத்தரங்கில் பங்கேற்போர், இவ்வெள்ளியன்று திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்திக்க உள்ளனர்.