உயிர் காக்கும் மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கும் வழிகளை திருஅவை எதிர்பார்க்கிறது
- பேராயர் Zygmunt Zimowski
மே,22,2013. உயிர் காக்கும் மருந்துகள் அனைவருக்கும் இலவசமாக, அல்லது மிகக் குறைந்த விலையில்
கிடைக்கும் வழிகளை அனைத்து அரசுகளும் தீவிரமாகத் தேடுவதையே கத்தோலிக்கத் திருஅவை எதிர்பார்க்கிறது
என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மேமாதம் 22ம் தேதி முதல் 28ம் தேதி
முடிய Geneva வில் நடைபெற்றுவரும் உலக நலவாழ்வு நிறுவனத்தின் 66வது மாநாட்டில் உரையாற்றிய
திருப்பீட நலவாழ்வுத் துறையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski இவ்வாறு கூறினார். மாநாட்டின்
தலைவருக்கும், பங்கேற்கும் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பான வாழ்த்துக்களைத்
தெரிவித்திருப்பதாக கூறி, பேராயர் Zimowski, தன் உரையைத் துவக்கினார். ஒவ்வொருவரின்
முழுமையான நலனை வளர்ப்பதன் வழியாகவே உலகம் முன்னேற முடியும் என்பதை, திருஅவை எப்போதும்
வலியுறுத்தி வந்துள்ளது என்று குறிப்பிட்ட பேராயர் Zimowski, உலகெங்கும் அனைவருக்கும்
அடிப்படை நலனை உறுதி செய்யும் மில்லென்னிய இலக்கினை அடைய அனைவருமே இணைந்து உழைக்க வேண்டும்
என்று கூறினார். நலவாழ்வும் முன்னேற்றமும் ஒவ்வொரு மனிதரின் உடல் தேவைகளை மட்டுமல்ல,
அவர்களது உணர்வுபூர்வ, ஆன்மீக, சமுதாய, மற்றும் பொருளாதாரத் தேவைகளிலும் கவனம் செலுத்துவதன்
வழியாக முழுமையான வளர்ச்சி பெற முடியும் என்பதை பேராயர் Zimowski வலியுறுத்தினார்.