2013-05-20 17:01:43

புதியவைகளை தாங்கி வரும் தூய ஆவியே மறைப்பணிகளின் ஆன்மா


மே 20, 2013. புதியவைகளைத் தாங்கி வருபவராக இருக்கும் தூய ஆவியே மறைப்பணிகளின் ஆன்மாவாக இருப்பதோடு, நற்செய்தியை எடுத்துச்செல்லும் நம் வழிகளில் ஊக்கத்தையும் தருகிறார் என தூய ஆவியானவரின் பெந்தக்கோஸ்து திருவிழாவான இஞ்ஞாயிறன்று காலை தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடிய ஏறத்தாழ இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை கூறினார்.
நம்பிக்கை ஆண்டில் இடம்பெற்ற இவ்விழாவில் பங்குகொள்ள உலகின் பல பகுதிகளிலிருந்து பல்வேறு அமைப்புகளின் அங்கத்தினர்கள் குழுமியிருந்த இத்திருப்பலியில், தூயஆவி குறித்து மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், பெந்தக்கோஸ்து நிகழ்வு பல ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஒன்றாக இருப்பினும் அது நம் இதயங்களை இன்றும் ஆழமாகத் தொடும் வகையில் அருகாமையில் உள்ளது என்றார்.
திருத்தூதர் பணிகள் நூல் உரைக்கும் இப்பகுதி, நமக்கு மூன்று முக்கிய கருத்துக்களை நினைவுறுத்தி நிற்கின்றன என்ற திருத்தந்தை, புதியன, இணக்கம், மறைப்பணி என்பவைகளாக அவைகளைக் குறிப்பிட்டு, அவைகள் குறித்த விளக்கங்களையும் அளித்தார்.
இத்திருப்பலியின் இறுதியில் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களோடு இணைந்து அல்லேலூயா வாழ்த்து செபத்தை செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.