2013-05-15 17:34:34

மக்களுக்குப் பணிபுரிவதே ஆயர்களுக்கும், அருள் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள முதன்மையான கடமை - திருத்தந்தை பிரான்சிஸ்


மே,15,2013. திருஅவையில் ஆயராகவோ, அருள் பணியாளராகவோ பணிபுரிவோர் அவரவர் சுய இலாபங்களுக்காகப் பணி புரிபவர்கள் அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இப்புதன் காலையில் புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் வத்திக்கான் வானொலி பணியார்களின் ஒரு குழுவினருக்குத் திருப்பலியாற்றிய திருத்தந்தை, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
திருத்தூதர் பணிகள் 20ம் பிரிவில், எபேசு நகர் மூப்பர்களுக்கு புனித பவுல் அடியார் அளித்த பிரியாவிடை உரையை தன் மறையுரையின் மையமாக்கியத் திருத்தந்தை, மக்களுக்குப் பணிபுரிவது ஒன்றே ஆயர்களுக்கும், அருள் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள முதன்மையான கடமை என்பதை வலியுறுத்தினார்.
தன் தேவைகளுக்கு, தானே உழைத்த புனித பவுல் அடியாரை எடுத்துக்காட்டாகக் கூறியத் திருத்தந்தை, பணம், புகழ், பதவி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாடுபடும் திருஅவைப் பணியாளர்கள் இறைவனின் உண்மையான பணியாளர்கள் அல்ல என்பதையும் தெளிவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.