2013-05-14 16:16:01

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாப்பிறைப் பணிக்காலத்தைப் பாத்திமா அன்னைமரியிடம் அர்ப்பணிப்பு


மே,14,2013. கத்தோலிக்கத் திருஅவையைப் புதுப்பித்து சீரமைப்புச் செய்வதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முயற்சித்துவரும் இவ்வேளையில், அன்னைமரியா அவருக்கு மிகுந்த துணிச்சலையும் சக்தியையும் அளித்தருளுமாறு செபித்தார் போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் கர்தினால் Jose da Cruz Policarpo.
பாத்திமா அன்னையின் திருவிழாவான இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாப்பிறைப் பணிக்காலத்தை பாத்திமா அன்னையிடம் அர்ப்பணித்துச் செபித்த கர்தினால் Policarpo, திருஅவையைப் புதுப்பிக்கும் வழிகளைக் கண்டுபிடிப்பதற்குத் தேர்ந்துதெளியும் கொடையையும், தூயஆவி பரிந்துரைக்கும் வழிகளைத் தயக்கமின்றி பின்செல்வதற்குத் துணிச்சல் எனும் கொடையையும் அவருக்கு வழங்குமாறும் செபித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த தனது முயற்சிகளில் எதிர்கொள்ளும் துன்பங்களின் கடின நேரங்களில் அன்னைமரி அவருக்கு ஆதரவாக இருக்குமாறும் செபித்த கர்தினால் Policarpo, திருஅவையின் தாயாகிய மரியே உம்மிடம் புதிய திருத்தந்தையின் திருப்பணிக் காலத்தை அர்ப்பணிக்கிறோம் என்றும் செபித்தார்.
பாத்திமாவில் மூன்று சிறாருக்கு அன்னைமரியா காட்சி கொடுத்ததன் 96ம் ஆண்டு நிறைவுத் திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகச் செபித்தார் லிஸ்பன் கர்தினால் Policarpo.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது திருப்பணிக் காலத்தை பாத்திமா அன்னையிடம் அர்ப்பணிக்குமாறு ஏற்கனவே கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.