கர்தினால் ஃபிலோனி : நற்செய்தி அறிவிப்புப்பணி முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
மே,14,2013. கிறிஸ்தவச் செய்தியை நவீன மனிதருக்கு எப்படி வழங்க வேண்டும் என்பது குறித்துப்
பரிசீலனை செய்ய வேண்டும் என்று திருப்பீட நற்செய்தி அறிவிப்புப்பணிப் பேராயத் தலைவர்
கர்தினால் Fernando Filoni கூறினார். இத்திங்களன்று தொடங்கியுள்ள பாப்பிறை மறைப்பணிக்
கழகங்களின் மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய கர்தினால் ஃபிலோனி, நமது மறைப்பணிகள் பலனுள்ளவையாகவும்,
ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் அமைவதற்கு நமது நற்செய்தி அறிவிப்புப்பணி முறைகளை மறுபரிசீலனை
செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார். இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் பல பிரதிநிதிகளின்
நாடுகளில் அடக்குமுறைகளும், ஏழ்மையும், வன்முறையும், சண்டைகளும் இடம்பெறுவதைக் குறிப்பிட்டுப்
பேசிய கர்தினால் ஃபிலோனி, இந்தச் சூழல்கள், பாப்பிறை மறைப்பணிக் கழகங்களின் பணிகளில்
தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும் கூறினார். வருகிற சனிக்கிழமைவரை நடைபெறும் இந்த
ஒரு வார மாநாட்டில் ஏறக்குறைய 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.