கொலம்பியா நாட்டு அரசுத்தலைவர் Santos Calderón, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு
மே,13,2013. கொலம்பியா நாட்டு அரசுத்தலைவர் Juan Manuel Santos Calderón அவர்களை இத்திங்கள்
காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்தில் வரவேற்று உபசரித்தார். சுமுகமானச்
சூழலில் நடைபெற்ற இச்சந்திப்பில், முதல் கொலம்பிய புனிதரான அன்னை Laura Montoya Upegui
அவர்களைப் பற்றியும், கொலம்பிய நாட்டில் பல நூற்றாண்டுகளாக வேரூன்றியுள்ள கிறிஸ்தவ நம்பிக்கையின்
வரலாறும் பேசப்பட்டன என்று வத்திக்கான் செய்தி அலுவலகம் கூறியது. கொலம்பிய அரசு சந்திக்கும்
பல்வேறு சவால்கள் குறித்தும், சிறப்பாக, அந்நாட்டின் முழுமையான முன்னேற்றத்திற்கு இளையோர்
அளிக்கக்கூடிய பங்கு குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது. திருத்தந்தையைச் சந்தித்தபின்,
கொலம்பிய அரசுத் தலைவர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே அவர்களையும்,
பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும்
சந்தித்தார்.