விண்ணேற்றப் பெருவிழா / அன்னை தினம் : ஞாயிறு சிந்தனை
இன்று அன்னை தினம்.
உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறன்று அன்னை
தினம் கொண்டாடப்படுகிறது. கத்தோலிக்கத் திருஅவையில், இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக்
கொண்டாடும் இந்த ஞாயிறன்று, 800க்கும் அதிகமானோரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர்
நிலைக்கு உயர்த்துகிறார். நாளை, மே 13ம் தேதி, திங்களன்று பாத்திமா நகர் புனித அன்னை
மரியாவின் திருநாளையும் கொண்டாடவிருக்கிறோம். ஒவ்வொரு விழாவும் கொண்டாட்டங்களைக் கொணர்ந்தாலும்,
கூடவே ஒரு சில கேள்விகளையும் கொணர்கின்றன. இவ்விழாக்களின் வரலாற்றுப் பின்னணிகளுடன்,
இக்கேள்விகளுக்கு ஓரளவு தெளிவான விடைகளைத் தேடினால், இவ்விழாக்களை இன்னும் பொருளுள்ள
வகையில் கொண்டாடமுடியும்.
அன்னை தினத்தில் நம் கேள்விகளை ஆரம்பிக்கிறோம்... இந்த
நாளை அன்னை தினம் என்று ஒருமையில் அழைப்பதா? அன்னையர் தினம் என்று பன்மையில் அழைப்பதா?
என்ற கேள்வி எழலாம். அமெரிக்காவில் இத்தினத்தை அதிகாரப் பூர்வமான ஒரு நாளாக அரசு அறிவிக்க
வேண்டுமென்று பல வழிகளிலும் பாடுபட்ட Anna Jarvis என்பவர் இக்கேள்விக்குச் சரியான விடை
அளிக்கிறார்: "இது அன்னை தினம்தான். அன்னையர் தினம் அல்ல. நம் ஒவ்வொருவரின் அன்னையைத்
தனிப்பட்ட வகையில் சிந்தித்து, அவருக்கு நாம் செலுத்தும் காணிக்கை, இந்த
நாள். ‘அன்னையர்’ என்ற பன்மை வடிவம் கொடுத்து, முகமற்ற
ஒரு கருத்தைக் கொண்டாடும் நாள் இதுவல்ல." என்று அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். Anna
Jarvis பாடுபட்டு உருவாக்கிய இந்த நாள், சில ஆண்டுகளிலேயே வியாபார மயமாகிவிட்டதைக் கண்டு
அவர் மிகவும் மனம் நொந்தார். வாழ்த்து அட்டைகள், மலர் கொத்துகள், இனிப்பு வகைகள் என்று
அன்னை தினம், வியாபாரத் திருநாளாக மாறிவிட்டதை நாம் மறுக்க முடியாது. இந்த வியாபாரப்
பிடியிலிருந்து அன்னை தினத்தை விடுதலை செய்து, நம் ஒவ்வொருவரின் அன்னைக்கும் உரிய மதிப்பை
வழங்குவது நம் கடமை!
அம்மாவை, அன்னையை, தாயை மையப்படுத்திய வழிபாடுகளும், விழாக்களும்
மனித வரலாற்றில் பல பழமைக் கலாச்சாரங்களில் மதிப்புடன் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. அன்னைக்கென
வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணம் 19ம் நூற்றாண்டில் ஆரம்பமானது. சமூக ஆர்வலரும்,
கவிஞருமான Julia Ward Howe 1870ம் ஆண்டு சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். "அன்னைதின
அறைகூவல்" (Mother's Day Proclamation) என்ற பெயரில் வெளியான இந்தக் கவிதை உலகெங்கும்
அன்னை தினத்தைக் கொண்டாடுவதற்கு வித்திட்டது. இக்கவிதை விவரிக்கும் பெண்மை, தாய்மைப்
பண்புகள் நமது இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான பாடங்களைச் சொல்கிறது. இதோ அக்கவிதை: மகளிரே,
இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே எதிர்த்து நில்லுங்கள்! உங்களது
திருமுழுக்கு, தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும்
சரி... இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள். உறுதியாகச்
சொல்லுங்கள்: “வாழ்வின் மிக முக்கியக் கேள்விகளின் விடைகளைத்
தீர்மானிக்கும் உரிமையை குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்க
மாட்டோம். சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன்
வீடு திரும்பும் கணவர்கள் எங்கள் ஆரவார வரவேற்பையும், அரவணைப்பையும்பெறுவதற்கு
நாங்கள் இணங்கமாட்டோம். பிறரன்பு, கருணை,
பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு
எதிரான பாடங்களைச் சொல்லித்தரும் நிறுவனங்களிடம் எங்கள் குழந்தைகளை ஒப்படைக்க மாட்டோம்.
ஒரு நாட்டின் பெண்களாகிய நாங்கள், மற்றொரு
நாட்டின் பெண்கள் மீது கனிவு கொண்டவர்கள். எனவே, எங்கள்
மகன்கள் அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.”
நிர்மூலமாக்கப்பட்ட
இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம் எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது
சொல்வது இதுதான்: "ஆயுதங்களைக் களையுங்கள்! ஆயுதங்களைக் களையுங்கள்! உயிர் குடிக்கும்
வாள் ஒருநாளும் நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது!" என்பதே பூமியின் அடிவயிற்றிலிருந்து
எழும் அந்த ஓலம். போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள்
நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச் சென்றுள்ள ஆண்களைப்
போல், பெண்களும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும்.
போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்லமுடிவுகள் உருவாக,
பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும்.போரில்
இறந்தோரை நினைவுகூர, அவர்களுக்காக அழுது புலம்ப, பெண்கள் ஒன்று சேரட்டும். இந்த மனிதக்
குடும்பம் அமைதியில் வாழ்வதற்குரிய வழிமுறைகளைப் பெண்கள் கலந்து பேசட்டும். உலகின்மேல்,
சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின்
உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும். தாய், அல்லது அன்னை என்றதும் வீட்டுக்குள், அடுப்படியில் முடங்கிக் கிடக்கும்
பெண்ணாக அவர்களை எண்ணிப்பார்த்த காலத்தைக் கடந்து, சமுதாயத்தில் நல்ல முடிவுகளை எடுக்க,
பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்களது மென்மை கலந்த உறுதி உலகின் பிரச்சனைகளைத்
தீர்க்கும் வழிகளை உருவாக்கும் என்று 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இக்கவிதை முழங்குகிறது.
அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் இக்கவிதை எழுதப்பட்டது. அப்போரின் விளைவுகளைக்
கண்ட Julia Ward Howe எழுதிய இவ்வரிகள், இன்றும் நம்மைச் சூழ்ந்துள்ள அவலங்களைக் கூறும்
வரிகளாக அமைந்துள்ளன.
அன்னை தினத்திற்குக் கூறப்படும் மற்றொரு பின்னணியும் நம்
கவனத்தை ஈர்க்கின்றது. Leonard Sweet என்பவர் தன் மறையுரையில் இந்தப் பின்னணியைப் பற்றிக்
கூறுகிறார். இங்கிலாந்தில் 'Mothering Sunday' என்ற பழக்கம் 16ம் நூற்றாண்டிலேயே இருந்தது.
மே மாதம் மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம் என்பது கத்தோலிக்க பரம்பரையில் வளர்ந்துள்ள
ஓர் எண்ணம். அந்த மே மாதத்தின் ஒரு ஞாயிறு மரியன்னையின் நினைவாக 'Mothering Sunday' என்று
அழைக்கப்பட்டது. 16ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பல செல்வந்தர்களின் இல்லங்களில்
பெண்கள் இரவும் பகலும் பணி செய்து வந்தனர். அவர்களுக்கு விடுமுறை நாள் என்பதெல்லாம் கிடையாது.
தங்கள் இல்லங்களுக்குச் சென்று தங்கள் குழந்தைகளின் தேவைகளை நிறைவு செய்யும் வாய்ப்பும்
அவர்களுக்குக் கிடையாது. எனவே, மே மாதத்தின் ஒரு ஞாயிறன்று இந்தப் பணிப்பெண்கள் தங்கள்
குடும்பங்களுக்குச் சென்று, தங்கள் குழந்தைகளுடன் அந்த நாளைச் செலவிட விடுமுறை வழங்கப்பட்டது.
அந்த நாளுக்கு 'Mothering Sunday' அதாவது 'அன்னையாகும் ஞாயிறு' என்றும் பெயர் சூட்டப்பட்டது.
16ம்
நூற்றாண்டில் நிலவிய இந்தச் சூழல் மனதை உறுத்துகிறது. செல்வந்தர் வீட்டு வேலைகளில் ஆண்டு
முழுவதும் துன்பப்படும் பெண்களுக்கு ஒரு ஞாயிறை விடுமுறையாகத் தந்து 'அன்னையாகும் ஞாயிறு'
என்று அழைப்பதை அநீதி என்று மனம் சொல்கிறது. ஆயினும், இப்படிப்பட்ட ஓர் எண்ணமாவது இருந்ததே
என்று நமக்கே நாம் ஓரளவு சமாதனம் சொல்லிக் கொள்ளலாம். 16ம் நூற்றாண்டில் நிலவிய இதே நிலை
இன்றும் தொடர்வதை நாம் அறிவோம். வறுமையின் காரணமாகக் குடும்பங்களை, குழந்தைகளைப் பிரிந்து
வேறு இல்லங்களில், வேற்று நாடுகளில் பணி செய்யும் அன்னையர் பல கோடி பேர் உள்ளனர். அவர்களை
இன்று சிறப்பாக எண்ணி நம் செபங்களை எழுப்புவோம். பொருளாதார நிர்ப்பந்தங்களால் தங்கள்
தாய்மை நிலைக்குரிய உணர்வுகளைப் புதைத்துவிட்டு பரிதவிக்கும் இவர்களுக்கு விரைவில் ஒரு
விடிவு கிடைக்கவேண்டும் என்று சிறப்பாக செபிப்போம்.
பல்வேறு கட்டாயங்களால் பணிசெய்யும்
பெண்கள் என்று எண்ணிப்பார்க்கும்போது, நமது மனம் பங்களாதேஷில் Rana Plaza என்ற 8 மாடிக்
கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தை எண்ணிப் பார்க்கிறது. ஏப்ரல் 24ம் தேதி நிகழ்ந்த இந்த
விபத்தில் இறந்தவர்கள் பெரும்பாலும் பெண்கள். அவர்களில் பலர் இளம் அன்னையர். ஆடைகள் தயாரிக்கும்
பன்னாட்டு நிறுவனங்களுக்காக அடிமைகளாக உழைத்தவர்கள் இப்பெண்கள். இந்த விபத்து நிகழ்ந்து
17 நாட்கள் சென்று மே 10ம் தேதி, Reshma என்ற ஒரு பெண் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். இவரைப்
போல் இன்னும் பலர் உயிரோடு மீட்கப்படலாம் என்ற நம்பிக்கை அங்கு உருவாகியுள்ளது. இருப்பினும்,
இந்த விபத்தினால் மனித சமுதாயம் இழந்ததுதான் அதிகம். பன்னாட்டு ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களுக்காக
பங்களாதேஷ் நாட்டில் உற்பத்தியாகும் ஆடைகள் அந்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும்போது
அதன் விலை 3 அல்லது 4 டாலர்கள். அவை விற்பனையாகும்போது அதன் விலை 30 அல்லது 40 டாலர்கள்.
ஓர் ஆடையின் விற்பனை விலை கூட இப்பெண்களுக்கு மாத சம்பளமாகக் கிடைப்பதில்லை. அவர்கள்
பெறும் சராசரி மாத சம்பளம் (இதை அடிமைகளின் கூலி என்றே சொல்லவேண்டும்) 38 டாலர்கள். ஆடைகளை
உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் பேராசைக்கும், இந்நிறுவனங்களை எதிர்த்து நிற்கத்
துணியாத அரசுகளின் கோழைத்தனத்திற்கும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வழிகளில் பலியாகும் பெண்களை
இறைவன் சன்னிதிக்குக் கொணர்வோம். தங்கள் உயிர்பலி மூலம் பங்களாதேஷ் பெண்கள் நமக்கு அறிவுறுத்தும்,
நினைவுறுத்தும் பாடங்களை நாம் ஒவ்வொருவரும் பயில இறைவனின் அறிவொளியைத் தேடுவோம்.
உலகின்மேல்,
சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின்
உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும். Julia
Ward Howe 1870ம் ஆண்டு எழுதிய கவிதையின் இறுதி வரிகள் இன்று நாம் கொண்டாடி மகிழும் அன்னை
தினத்தையும், நாளை கொண்டாடவிருக்கும் பாத்திமா அன்னை திருநாளையும் இணைக்க உதவியாக உள்ளன.
உலகின் மேல் அதிகாரமான, ஆணவமான சீசரின் உருவம் பதியப் பதிய, மென்மேலும் போர்களாலும்,
வன்முறைகளாலும், வர்த்தக நிறுவனங்களின் பேராசைகளாலும் இந்த உலகம் சிதைந்து வருகிறது என்பதை
நன்கு அறிவோம். சீசரின் உருவைப் பதிப்பதற்குப் பதிலாக, அன்பான, ஆறுதலான கடவுளின் உருவைப்
பதிப்பது எப்படி என்பதை அன்னை மரியா தான் வாழ்ந்த காலத்தில் மட்டும் சொல்லித் தரவில்லை.
அவர் விண்ணகம் சென்றபின்பும் பல இடங்களில் தோன்றி இந்தச் செய்தியைப் பகிர்ந்தார். சிறப்பாக
பாத்திமா நகரில் அவர் தோன்றியபோது, உலகைச் சூழ்ந்திருந்த போரைக் குறித்தும், உலக அமைதிக்காக
மக்கள் செபங்களை எழுப்ப வேண்டும் என்பது குறித்தும் சிறப்பான செய்திகளைக் கூறினார்.
பல்வேறு
போர்களால், போராட்டங்களால் தொடர்ந்து காயப்பட்டு வரும் நமது உலகிற்குத் தாய்மை, பெண்மை
ஆகிய குணமளிக்கும் குணங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, இந்த அன்னை தினம், வாழ்த்து
அட்டைகள், மலர் கொத்துக்கள் என்று வெறும் வியாபாரத் திருநாளாக மாறிவிடாமல், நம் ஒவ்வொருவரிலும்
உள்ள தாய்மையை வெளிப்படுத்தும் ஒரு நாளாக, அதன் வழியாக உலகில் நீதியும், அதன் அடிப்படையில்
அமைதியும் வளர்வதற்கு உறுதியான அடித்தளமிடும் ஒரு நாளாக இருக்க வேண்டுமென்று சிறப்பாக
வேண்டிக்கொள்வோம்.