2013-05-11 15:47:18

இயேசு சபைத் தலைவர் : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்கள் இயேசு சபையின் ஆன்மீகத்தை வெளிப்படுத்துகின்றன


மே,11,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்கள் அவரை 100 விழுக்காடு இயேசு சபை துறவியாக வெளிப்படுத்துகின்றன என்று இயேசு சபைத் தலைவர் அருள்தந்தை Adolfo Nicolás கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது உலகளாவிய இயேசு சபையினர் உட்பட பலருக்கு வியப்பைத் தந்தது என்று ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த அருள்தந்தை Nicolás, இத்திருத்தந்தையின் நடவடிக்கைகளில் அவர் சார்ந்துள்ள இயேசு சபையின் ஆன்மீகத்தைக் காண முடிகின்றது என்று கூறினார்.
இயேசு சபையைச் சார்ந்தவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அச்சபையின் உறுப்பினர்கள் மீது எந்த எதிர்விளைவுகளையும் கொண்டிருக்கவில்லை என்றும் அருள்தந்தை Nicolás கூறினார்.
ஏழ்மை வார்த்தைப்பாடு இயேசு சபையினருக்கு எப்போதும் முக்கிய கோட்பாடாக இருந்தாலும், இச்சமயத்தில் திருஅவைக்குள் இக்கருத்து முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது எனவும் தெரிவித்தார் இயேசு சபைத் தலைவர் அருள்தந்தை Adolfo Nicolás.

ஆதாரம் : Romereports








All the contents on this site are copyrighted ©.