2013-05-11 15:46:24

800க்கும் மேற்பட்ட புதிய புனிதர்கள்


மே,11,2013. முத்திப்பேறுபெற்ற Antonio Primaldo மற்றும் அவரோடு சேர்ந்த 800 மறைசாட்சிகள், முத்திப்பேறுபெற்ற Laura Montoya, முத்திப்பேறுபெற்ற Maria Guadalupe García Zavala ஆகியோரை இஞ்ஞாயிறன்று புனிதர்கள் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலி, கொலம்பியா, மெக்சிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த இவர்கள் புனிதர்கள் என அறிவிக்கப்படவிருக்கும் திருப்பலியில், இத்தாலிய நீதித்துறை அமைச்சர் Anna Maria Cancellieri தலைமையில் 6 பேர், கொலம்பிய அரசுத்தலைவர் Juan Manule Santos Calderon தலைமையில் 20 பேர், மெக்சிகோவின் சமய விவகாரத்துறையின் இயக்குனர் Roberto Herrera mena தலைமையில் ஒரு குழுவினர் உட்பட பல்லாயிரக்கணக்கான விசுவாசிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இத்திருப்பலியை இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நிகழ்த்தவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முத்திப்பேறுபெற்ற Antonio Primaldo மற்றும் அவரோடு சேர்ந்த 800 மறைசாட்சிகளும் இசுலாமுக்கு மதம் மாற மறுத்ததால் 1480ம் ஆண்டில் தென் இத்தாலியில் Otranto என்ற சிறிய துறைமுக நகரில் ஒட்டமான் படைகளால் கொல்லப்பட்டவர்கள்.
கொலம்பிய நாட்டின் முத்திப்பேறுபெற்ற Laura Montoya அந்நாட்டின் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தவர். சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ள மக்களை முன்னேற்றவதற்கென ஒரு துறவு சபையையும் ஆரம்பித்த Laura Montoya கொலம்பியாவின் முதல் புனிதராக விளங்கவுள்ளார்.
மெக்சிகோ நாட்டு முத்திப்பேறுபெற்ற Maria Guadalupe García Zavala, புனித மார்கிரேட் மேரி மற்றும் ஏழைகளின் பணியாளர் சபையைத் தோற்றுவித்தவர். இவர் தனது 85வது வயதில் 1963ம் ஆண்டு இறந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.