2013-05-09 14:40:32

கற்றனைத்தூறும்..... மறைந்திருக்கும் கடற்கரை


மெக்சிகோ நாட்டின் Puerto Vallarta பசிபிக் பெருங்கடற்பகுதியிலுள்ள சிறிய Marieta தீவுகளில் பூமிக்கு கீழே ஒரு கடற்கரை மறைந்திருக்கின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற எரிமலை வெடிப்புகளால் இந்த Marieta தீவுகள் உருவாகியுள்ளன. இந்த Marieta தீவுகளிலுள்ள தண்ணீர்க் குகைப்பாதை வழியாக ஏறக்குறைய 40 முதல் 50 அடிவரை நீந்திச் சென்றால் அங்கு மறைந்திருக்கும் கடற்கரையைக் காணமுடியும். இந்தக் குகைப்பாதையில் பாறைக்கும் தண்ணீருக்கும் இடையே ஏறக்குறைய 5 முதல் 6 அடி உயர இடைவெளிதான் இருக்கிறது. இப்பாதை தண்ணீருக்குக் கீழேயிருக்கும் சுரங்கப்பாதை அல்ல. சுற்றிலும் பாறைகளை மதில்சுவர் போன்று கொண்டிருந்து, அவற்றுக்குள் அமைந்துள்ள இந்தக் கடற்கரை பசிபிக் பெருங்கடலுடன் தொடர்பு கொண்டுள்ளது. இங்கு ஏராளமான பவளப்பாறை மீன்கள் உட்பட 103 வகையான உயிரினங்கள் தெளிந்த நீலநிற நீரில் அங்குமிங்கும் அலைவது பார்ப்பவர் கண்களுக்கு மிக அழகாகத் தெரிகின்றன. சில நேரங்களில் திமிங்கிலங்களும் அப்பக்கம் வருகின்றன. இந்த உயிரினங்கள் அனைத்தும் எழுப்பும் இசை உண்மையிலேயே மிக இனிமையாக இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. Puerto Vallarta விலிருந்து மேற்கிலும், வடமேற்கிலும் ஏறக்குறைய ஒரு மணிநேரம் படகில் சென்றால் இந்த Marieta தீவுகளை அடையலாம். இத்தீவுகளில் மனிதர் யாரும் வாழாததால், இதனை ஒரு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, 1900களின் தொடக்கத்தில் மெக்சிகோ அரசு இங்கு இராணுவ நடவடிக்கைகளை நடத்தியது. இப்பரிசோதனைகளின்போது நடத்தப்பட்ட பெருமளவான வெடிகள் மற்றும் குண்டுவெடிப்புகளால் இத்தீவுகளில் நம்புதற்கரிய பல குகைகளும் பாறைகளும் உருவாகியுள்ளன. 1960களின் இறுதியில் அறிவியலாளர் Jacques Cousteau என்பவரின் தூண்டுதலால் அனைத்துலக அளவில் எழுந்த கடும் கண்டனங்களுக்குப் பின்னர் மெக்சிகோ அரசு இத்தீவுகளை தேசியப் பூங்காவாக அறிவித்து, மீன்பிடித்தல், வேட்டையாடுதல் உட்பட மனிதரின் அனைத்துச் செயல்பாடுகளுக்கு எதிராகப் பாதுகாத்து வருகிறது.

ஆதாரம் : விக்கிப்பீடியா







All the contents on this site are copyrighted ©.