ஆப்ரிக்காவின் Gabonநாட்டில் மனிதப் பலிகளை முற்றிலும் ஒழிக்க
ஆயர்கள் முயற்சி
மே,08,2013. ஆப்ரிக்காவின் Gabon நாட்டில், மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் நிகழ்ந்துவரும்
மனிதப் பலிகளை முற்றிலும் ஒழிக்கும் எண்ணத்தை வலியுறுத்தி, இம்மாதம் 11ம் தேதி அந்நாட்டின்
அனைத்து மறைமாவட்டங்களிலும் ஊர்வலங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஆயர்கள் அறிவித்துள்ளனர். பொருளாதார
நன்மைகள் கிடைக்கும் என்ற தவறான எதிர்ப்பார்ப்புடன், அந்நாட்டில் இளம் வயதினர் பலர் பலியாக
கொல்லப்படுகின்றனர், மற்றும் அவர்களது கண்கள், மூளை, இரத்தம் ஆகியவை நீக்கப்பட்டு, பலிச்
சடங்குகள் நடைபெறுகின்றன. பலி என்ற பெயரில் நடைபெறும் இந்தக் கொலைகளை நிறுத்துவதற்கு,
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் வருகிற சனிக்கிழமையன்று அனைத்து
மறைமாவட்டங்களிலும் ஊர்வலங்களும், கூட்டங்களும் நடத்த அந்நாட்டு ஆயர்கள் அண்மையில் தீர்மானம்
ஒன்றை வெளியிட்டுள்ளனர். Gabon நாட்டில் முக்கியமாக 4 பகுதிகளில் நடைபெற்று வரும்
இத்தகையக் கொடுமைகளால், 2010ம் ஆண்டு 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 2011ம் ஆண்டு
62 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.