2013-05-08 16:16:52

அருள் சகோதரி சபைகளின் அகில உலகத் தலைவர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு


மே,08,2013. துறவற வாழ்வில் தங்களை அர்ப்பணிக்கும் ஒவ்வொருவரும் தான் என்ற மையத்திலிருந்து, இயேசு என்ற மையத்தை நோக்கிச் செல்லும் விடுதலைப் பயணத்தை மேற்கொள்பவர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மே மாதம் 3ம் தேதி முதல் 7ம் தேதி முடிய உலகின் 76 நாடுகளிலிருந்து 900க்கும் அதிகமாய் வந்துள்ள அருள் சகோதரி சபைகளின் தலைவர்களை திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் இப்புதன் காலை சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அகில உலகக் கூட்டத்தில், இவ்வாண்டு "உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது, உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்" என்ற மத்தேயு நற்செய்தி வார்த்தைகள் மையக் கருத்தாய் அமைந்தன.
கீழ்ப்படிதல், ஏழ்மை, கற்பு ஆகிய மூன்று வாக்குறுதிகள் வழியாக, தான் என்ற மையத்திலிருந்து கிளம்பி, கிறிஸ்துவை நோக்கி மேற்கொள்ளப்படும் பயணத்தைப் பற்றி திருத்தந்தை எடுத்துரைத்தார்.
உண்மையான அதிகாரம் என்பது பணியில் மட்டுமே அமைகின்றது என்றும், அதிகாரத்தில் இருப்பவர்களின் கண்கள் எப்போதும் சிலுவையில் இருக்கும் கிறிஸ்துவை நோக்கியபடி இருப்பது, அதிகாரத்தின் முழு பொருளை உணர்த்தும் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
கிறிஸ்துவை முழு அன்புடன் பின்பற்றுங்கள் என்று தன் உரையின் இறுதியில் வலியுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சபைத் தலைவர்கள் அனைவரையும் தனக்காக செபிக்கும்படி கூறியபின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.