ஊடகவியலாளரின் பாதுகாப்புக்கு ஐ.நா. அதிகாரிகள் அழைப்பு
மே,03,2013. ஒவ்வொரு நாளும் பேச்சுச் சுதந்திரம் புதிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிவரும்வேளை,
ஒவ்வொரு நாட்டிலும் ஊடகவியலாளருக்குப் பாதுகாப்புகள் அளிக்கப்படுமாறு ஐ.நா. அதிகாரிகள்
கேட்டுள்ளனர். இவ்வெள்ளிக்கிழமையன்று 20வது அனைத்துலக பத்திரிகை சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்பட்டதை
முன்னிட்டு, ஐ.நா.பொதுச்செயலரும் யுனெஸ்கோ நிறுவன இயக்குனரும் இணைந்து வெளியிட்டுள்ள
செய்தியில், இன்று உலகில் ஊடகவியலாளர் எதிர்கொள்ளும் சித்ரவதைகள், தடுப்புக்காவல்கள்
மற்றும் பிற துன்பங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. உலகில் கடந்த பத்து ஆண்டுகளில்
600க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் சண்டை இடம்பெறாத
இடங்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்று யுனெஸ்கோ நிறுவனம் கூறியுள்ளது. ஊடகவியலாளர் கொல்லப்படும்
குற்றங்களில் பத்துக்கு ஒன்பது பேர் தண்டிக்கப்படாமலேயே விடப்படுகின்றனர் என்றும் யுனெஸ்கோ
கூறியுள்ளது. “பேசுவதற்குப் பாதுகாப்பு : அனைத்து ஊடகங்களிலும் பேச்சு சுதந்திரத்திற்குப்
பாதுகாப்பு” எனும் தலைப்பில் இவ்வாண்டு இவ்வுலக தினம் கடைப்பிடிக்கப்பட்டது.