2013-05-01 15:57:13

அகில உலக உழைப்பாளர் நாளையொட்டி இஸ்பானிய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள செய்தி


மே,01,2013. முழு ஈடுபாட்டுடனும், திறமையுடனும் செயலாற்றி, தங்கள் நேர்மையான உழைப்பாலும், வியர்வையாலும் தங்கள் குடும்பங்களைக் காத்து வரும் அனைத்து உழைப்பாளிகளுக்கும் தங்கள் மரியாதையை செலுத்துவதாக இஸ்பானிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
இப்புதனன்று கொண்டாடப்படும் அகில உலக உழைப்பாளர் நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள இஸ்பானிய ஆயர் பேரவை, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் ஸ்பெயின் நாட்டுக்கு வருகை தந்தை 25ம் ஆண்டு நினைவையும் குறித்து தன் மகிழ்வை வெளியிட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள் நாளுக்கு நாள் உறுதிவாய்ந்த அமைப்புக்களாக மாறிவரும் சூழலில், அனைத்து உழைப்பாளிகளுக்கும் தகுந்த மதிப்பு, உழைப்பிற்கேற்ற ஊதியம் ஆகிய அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும் என்ற அழைப்பையும் இஸ்பானிய ஆயர்கள் விடுத்துள்ளனர்.
தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் சமுதாய மேம்பாட்டை மனதில் கொள்ள வேண்டும் என்றும், உரிமைகளுக்காகப் போராடும் உழைப்பாளிகள் அனைத்து மக்களின் நலன்களை மனதில் கொண்டு போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆயர்கள் தங்கள் செய்தியில் எடுத்துரைத்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.