2013-04-30 16:10:59

திருத்தந்தை : உலகாயுதப்போக்குள்ள திருஅவை நற்செய்தியை அறிவிக்க முடியாது


ஏப்.30,2013. உலகாயுதப்போக்குள்ள திருஅவையால் நற்செய்தியை அறிவிக்க முடியாது, இந்தப் போக்கினின்று திருஅவையைக் காப்பாற்ற வேண்டுமெனில், இடைவிடாத செபத்தின் மூலம் நம் ஆண்டவரிடம் அதனை ஒப்படைப்பதே ஒரேவழி என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தில் இச்செவ்வாய் காலையில் நிகழ்த்திய திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, நமது பணியால் திருஅவையை நம்மால் காப்பாற்ற முடியும், அதனைக் குணப்படுத்த முடியும் என்றும் கூறினார்.
தீமையின் முகத்தை நோக்கி அதனை வெற்றிகொள்ளும் ஒரேயொருவரான நம் ஆண்டவர் செய்தது போன்று நாமும் செய்ய வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவைக்காக, உலகளாவியத் திருஅவைக்காக, உலகெங்கும் நாம் அறிந்திராத நம் சகோதர சகோதரிகளுக்காக நாம் செபிக்கின்றோமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இது நம் ஆண்டவரின் திருஅவை, ஆண்டவரே உமது திருஅவையை கண்ணோக்கும், ஆண்டவரே, இது உமது திருஅவை என்று நமது செபத்தில் நாம் செபிக்க வேண்டுமென்றும், முதியோர், நோயாளிகள், சிறார், இளையோர் என அனைவரையும், உலகளாவியத் திருஅவையையும் ஆண்டவரிடம் ஒப்படைத்துச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
APSA எனப்படும் திருப்பீடப் பாரம்பரியச் சொத்து நிர்வாகத் துறையினர் இச்செவ்வாய் காலையில் திருத்தந்தையின் திருப்பலியில் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.