ஏப்.29,2013. பங்களாதேசில் தொழில்கூடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின்
குடும்ப அங்கத்தினர்களுக்கு தன் அனுதாபத்தை வெளியிடுவதோடு, அவர்களுடன் ஒருமைப்பாட்டை
தெரிவிப்பதாகவும் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறன்று காலை உரோம் நகர்
தூய பேதுரு வளாகத்தில் நிறைவேற்றிய உறுதிப்பூசுதல் திருப்பலிக்குப்பின், அல்லேலூயா வாழ்த்தொலி
உரை வழங்கிய திருத்தந்தை, பங்களாதேசில் தொழிற்சாலை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக
சிறப்பான விதத்தில் செபிப்பதாகவும் உறுதிகூறினார். தொழிலாளர்களின் பாதுகாப்பும் மாண்பும்
எச்சூழலிலும் மதிக்கப்படவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை. பங்களாதேஷ்
தலைநகர் டாக்காவுக்கு மேற்கே சாவர் எனுமிடத்தில் ரானா பிளாசா என்ற எட்டுமாடிக் கட்டிடம்
இம்மாதம் 24ம் தேதி இடிந்து விழுந்ததில் குறைந்தபட்சம் 380 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரம்பேர்
வரை காணாமல்போயுள்ளனர்.