2013-04-27 16:57:38

பணி தொடர்புடைய நோய்களைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் அவசியம்


ஏப்.27,2013. ஆண்டுதோறும் பணி தொடர்புடைய நோய்களால் ஏறக்குறைய 20 இலட்சம் பேர் இறக்கும்வேளை, பணி தொடர்புடைய ஆனால் உயிருக்கு ஆபத்தில்லாத நோய்களால் 16 கோடிக்கு அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர் என்று ILO என்ற உலக தொழில் நிறுவனம் கூறியது.
பணி தொடர்புடைய நோய்களால் இடம்பெறும் இறப்புகளும் பாதிப்புக்களும் உலகில் அதிகரித்துவரும்வேளை, இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாகத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ILO நிறுவனத்தின் புதிய அறிக்கை வலியுறுத்துகிறது.
பணியில் இருப்போருக்குப் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலவாழ்வு குறித்த உலக தினத்தை முன்னிட்டு ILO இயக்குனர் Guy Ryder வெளியிட்ட அறிக்கையில், பணி தொடர்புடைய நோய்களால் மனித வாழ்வு இழக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
பணியோடு தொடர்புடைய இறப்புகள் ஆண்டுதோறும் ஏறக்குறைய 23 இலட்சத்து 40 ஆயிரம் இடம்பெறும்வேளை, இவற்றில் ஏறக்குறைய 20 இலட்சம் இறப்புகள் பணி தொடர்புடைய நோய்களால் ஏற்படுகின்றன என்று ILO நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது.
ஏப்ரல் 28 இஞ்ஞாயிறு பணியில் இருப்போருக்குப் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலவாழ்வு குறித்த உலக தினமாகும்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.