2013-04-27 16:44:00

டாக்கா கட்டிட விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் செபம்


ஏப்.27,2013. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற கட்டிட விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காகத் தன்னோடு சேர்ந்து செபிக்குமாறு தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும், அத்துன்பத்தைத் தாங்கும் சக்தியையும் இறைவன் கொடுக்குமாறு செபிக்கவும் கேட்டுள்ளார் திருத்தந்தை.
மேலும், “அன்பு இளையோரே, கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள கொடைகளாகிய உங்களது திறமைகளைப் புதைத்து வைக்காதீர்கள், மாபெரும் காரியங்கள் குறித்து கனவு காண்பதற்குப் பயப்படாதீர்கள்” என்று இவ்வெள்ளிக்கிழமை மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டாக்காவையடுத்துள்ள சவார் பகுதியில் இரண்டு ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வந்த Rana 8 மாடி கட்டிடம் கடந்த புதன்கிழமையன்று இடிந்ததில், அங்கு பணியில் இருந்த ஆயிரக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில் 340க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இன்னும் ஏறக்குறைய 900 பேரைக் காணவில்லை. மீட்பு பணிகளும் இடைவிடாமல் இடம்பெற்றுவருகின்றன எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இவ்விபத்து தொடர்பாக, இவ்விரண்டு தொழிற்சாலைகளின் முதலாளிகளும், இரு பொறியியலாளர்களும் இச்சனிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.