ஏப்.27,2013. உலகில் அதிகம் வல்லமைமிக்க 27 நாடுகளில் இந்தியா 8வது இடத்தில் உள்ளதாக,
யுக்திகள் நிறைந்த வல்லுனர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட தேசியச் சக்தி என்ற குழு எடுத்த
ஆய்வு தெரிவிக்கிறது. புதுடெல்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் FSNR என்ற தேசியப்
பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் சார்பில், பாதுகாப்பு வலிமை, மக்கள்தொகை, தொழில்நுட்ப
வளர்ச்சி உள்ளிட்டவை அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், சீனா 2வது இடத்திலும், அமெரிக்க
ஐக்கிய நாடு முதல் இடத்திலும் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. வலிமையும், கட்டுப்பாடுகளும்
நிறைந்த நகரங்களில் பெய்ஜிங்கிற்கு அடித்தபடியாக டில்லி உள்ளதாகவும் இவ்வாய்வில் கூறப்பட்டுள்ளது.
வலிமையில் சீனா, அமெரிக்காவை மிக நெருங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் அமெரிக்காவையே
அச்சுறுத்தும் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடாக சீனா உருவெடுக்க வாய்ப்பு இருப்பதாகவும்
இவ்வாய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, பொருளாதாரத்தில் இந்தியா
8வது இடத்திலும், இராணுவ வலிமையில் 7வது இடத்திலும், தொழில்நுட்ப வளர்ச்சியில் 17வது
இடத்திலும், வெளியுறவுத்தன்மையில் 11வது இடத்திலும் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.