இந்திய காரித்தாஸ் ஏறக்குறைய 5 இலட்சம் பேருக்கு மலேரியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது
ஏப்.26,2013. வடகிழக்கு இந்திய மாநிலங்களும், ஒடிசா, ஜார்க்கண்ட், சட்டிஷ்கார், மத்திய
பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளும் மலேரியாவால் அதிகம் தாக்கப்படுகின்றன
என்று இந்திய காரித்தாஸ் நிறுவனம் கூறியது. இவ்வியாழனன்று அனைத்துலக மலேரியா தினத்தைக்
கடைப்பிடித்த இந்திய காரித்தாஸ் நிறுவனம், இந்தியாவில் மலேரியாவால் ஆண்டுதோறும் ஏறக்குறைய
முப்பதாயிரம் பேர் வீதம் இறக்கும்வேளை, அந்நோயைத் தடுப்பது மற்றும் அதற்குச் சிகிச்சை
அளிப்பது குறித்த கலந்தாய்வை நடத்தியுள்ளது. 82 விழுக்காட்டு இந்தியர்கள் மலேரியாவால்
எளிதில் தாக்கப்படும் பகுதிகளில் வாழும்வேளை, 20 விழுக்காட்டு மக்கள் இந்நோயினால் அதிகம்
தாக்கப்படுகின்றனர் என்று இந்திய காரித்தாஸ் நிறுவன உதவி இயக்குனர் அருள்பணி Paul Moonjely
கூறினார். வடகிழக்கு இந்தியாவில் 48 மாவட்டங்களில் ஏறக்குறைய 5 இலட்சம் பேருக்கு
மலேரியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது இந்திய காரித்தாஸ் நிறுவனம். ஏப்ரல்
25, அனைத்துலக மலேரியா தினமாகும்.