2013-04-25 16:16:38

புலம்பெயரும் மக்கள், வளர்ச்சி அடைந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அதிகமாக உழைக்கின்றனர் - பேராயர் சுள்ளிக்காட்


ஏப்.25,2013. உலகமயமாக்கப்பட்டப் பொருளாதாரம் நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனிதர்களை ஒருங்கிணைக்கும் அதேநேரம், பொருளாதார மற்றும் சமுதாய ஏற்றத் தாழ்வுகள் மனித குலத்தில் ஆழமான பிரிவுகளையும் உருவாக்கி வந்துள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மக்கள்தொகையும், முன்னேற்றமும் என்ற மையக்கருத்துடன் ஐ.நா.வின் தலைமையகத்தில் இப்புதனன்று நடைபெற்ற 46வது பொது அமர்வில், திருப்பீடத்தின் நிரந்தப் பார்வையாளராக ஐ.நா. கூட்டங்களில் பங்கேற்கும் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் இவ்வாறு கூறினார்.
மனித வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவு புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கூடியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் சுள்ளிக்காட், புலம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் குடும்பங்களும், முக்கியமாக, பெண்களும் சந்திக்கும் பிரச்சனைகளை, சிறப்பாக எடுத்துரைத்தார்.
உலகின் கண்களில் முக்கியமில்லாதவர்களாக வாழும் இம்மக்களைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் குருத்து ஞாயிறன்று தன் மறையுரையில் கூறியதைச் சுட்டிக்காட்டிய பேராயர் சுள்ளிக்காட், புலம்பெயர்ந்தோரை ஓர் எண்ணிக்கையாக காணாமல், மனிதர்களாகக் காணும் பக்குவத்தை உலக நாடுகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
வளரும் நாடுகளிலிருந்து வளர்ச்சி அடைந்த நாடுகளுக்குப் புலம்பெயரும் மக்கள், அந்நாடுகளின் வளர்ச்சிக்கு இன்னும் அதிகமாக உழைக்கின்றனர் என்பதை அரசுகள் மறுக்கவும், மறைக்கவும் முடியாது என்றும் பேராயர் சுள்ளிக்காட் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.