நம்பிக்கை ஆண்டின் இரு முக்கிய நிகழ்வுகள், வருகிற இரு ஞாயிறுகள் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெறும்
ஏப்.25,2013. ஏப்ரல் 28, வருகிற ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலகின் பல
நாடுகளின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 44 இளையோருக்கு உறுதி பூசுதல் வழங்குவார்
என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். நடைபெறும் நம்பிக்கை ஆண்டின் முக்கிய
நிகழ்வுகளில் இரண்டு, வருகிற இரு ஞாயிறுகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில்,
வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடைபெறும் என்று புதிய நற்செய்திப் பணி
திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Rino Fisichella இப்புதனன்று செய்தியாளர்களிடம் கூறினார். ஏப்ரல்
27, 28 ஆகிய இருநாட்கள் நடைபெறும் நிகழ்வுகள் இவ்வாண்டு உறுதிப்பூசுதல் பெற்றுள்ள, அல்லது
பெறவிருக்கும் இளையோரை மையப்படுத்தியது என்று எடுத்துரைத்த பேராயர் Fisichella, இந்நிகழ்வுகளில்
கலந்துகொள்ள இதுவரை 70,000 இளையோர் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர் என்று கூறினார். ஏப்ரல்
27, சனிக்கிழமையன்று, இவ்விளையோர் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திலிருந்து ஊர்வலமாகக்
கிளம்பி, கத்தோலிக்க விசுவாசத்தின் அடித்தளமாக விளங்கும் புனித பேதுரு கல்லறையை அடைந்து
அங்கு செபத்தில் ஈடுபடுவர் என்று பேராயர் Fisichella விளக்கினார். மேலும், கத்தோலிக்கத்
திருஅவையில் பின்பற்றப்படும் பல பக்திமுயற்சிகளின் அமைப்பினர் கலந்துகொள்ளும் சிறப்பு
நிகழ்ச்சிகள் மேமாதம் 3, 4 தேதிகளில் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் நடைபெறும்
என்றும், திருத்தந்தையின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ள இதுவரை 50,000க்கும்
அதிகமானோர் பதிவு செய்துள்ளனர் என்றும் பேராயர் Fisichella செய்தியாளர்களிடம் கூறினார்.