2013-04-25 16:12:16

கிறிஸ்தவர்கள் தங்கள் வார்த்தைகளை விட, வாழ்வால் கிறிஸ்துவை பறைசாற்ற வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்


ஏப்.25,2013. கிறிஸ்தவர்கள் தாழ்ச்சியுடன் செயல்படும் அதே வேளையில், பெரும் செயல்களாற்ற தயங்கக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
ஏப்ரல் 25, இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட நற்செய்தியாளர் புனித மாற்கு திருநாள் திருப்பலியை புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருத்தந்தை, இயேசுவின் துணையுடன் திருத்தூதர்கள் உலகின் எல்லைகளுக்குச் செல்ல பணிக்கப்பட்டனர் என்ற நற்செய்தியை மையமாகக்கொண்டு தன் மறையுரையை வழங்கினார்.
ஆயர்களின் சிறப்பு அவைகளை ஏற்பாடு செய்யும் திருப்பீட அலுவலகத்தின் தலைமைச் செயலர் பேராயர் Nikola Eterovic தலைமையில் இயங்கும் அலுவலகப் பணியாளர்களும், வத்திக்கான் காவல் துறையினரும் கலந்துகொண்ட இத்திருப்பலியில், கிறிஸ்துவை உலகெங்கும் எடுத்துச்செல்ல கிறிஸ்தவர்கள் தயங்கக்கூடாது என்று திருத்தந்தை கூறினார்.
கிறிஸ்தவர்கள் தங்கள் வார்த்தைகளை விட, வாழ்வால் கிறிஸ்துவை பறைசாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களிடம் தாழ்ச்சியுடன், துணிவும் இணைந்து செயலாற்றவேண்டும் என்று எடுத்துரைத்தார்.
ஆழமான ஆர்வத்துடனும், தாழ்ச்சியுடனும் கிறிஸ்துவை உலகின் பல திசைகளுக்கு எடுத்துச்சென்ற திருத்தூதர்களைப் போல நாமும் செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.