2013-04-25 16:13:50

இத்தாலிய அரசுத் தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ் தொலைபேசி மூலம் தொடர்பு


ஏப்.25,2013. பிளவுகளை விட ஒருமைப்பாடு உயர்ந்தது என்பதை உணர்த்தும் உங்கள் முடிவை நான் பாராட்டுகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய அரசுத் தலைவர் Giorgio Napolitano அவர்களிடம் கூறினார்.
இப்புதன் மாலை 6 மணியளவில் இத்தாலிய அரசுத் தலைவர் அவர்களை, தொலைபேசி மூலம் நேரடியாகத் தொடர்புகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது நாம விழாவான புனித ஜார்ஜ் திருநாளன்று அரசுத் தலைவர் அனுப்பியிருந்த வாழ்த்துத் தந்திக்கு நன்றி தெரிவித்தார்.
இத்தாலிய அரசுத் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றிருக்கும் Napolitano அவர்கள் தனக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்பதைக் கூறியத் திருத்தந்தை, உறுதியற்ற நிலையில் அமைந்துள்ள இத்தாலிய அரசின் அரசுத் தலைவராக Napolitano மீண்டும் பொறுப்பேற்றிருப்பதற்குத் தன் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இவ்வியாழனன்று கொண்டாடப்படும் இத்தாலிய விடுதலை நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள Twitter செய்தியில், பிரச்சனைகள் நிறைந்த இந்நேரத்தில், எண்ணங்களை மூடிவிடாமல், பிறரது கருத்துக்களைக் கவனமாகக் கேட்க மனதைத் திறப்போம் என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.