2013-04-25 16:18:48

ஆசியா-பசிபிக் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டப்படுவது 13.4 மடங்கு உயர்ந்துள்ளது - ஐ.நா. அறிக்கை


ஏப்.25,2013. ஆசியா-பசிபிக் பகுதியில் வாழ்வோர், உலகின் பிற நாடுகளில் வாழ்வோரைக் காட்டிலும், இயற்கை வளங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் என்றும், இது ஆபத்தான போக்கு என்றும் ஐ.நா.வின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
செல்வச் செழிப்பு, மற்றும் பொருள்களின் உற்பத்தி ஆகியவற்றில் அதிக அளவில் வளர்ந்துவரும் ஆசியா-பசிபிக் நாடுகள், பூமியின் இயற்கைவளங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு, அவற்றை மீண்டும் உருவாக்காமல் விடுவது ஆபத்து என்பதை இப்புதனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஐ.நா. வின் சுற்றுச்சூழல் அமைப்பு கூறியுள்ளது.
1970ம் ஆண்டுக்கும் 2008ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஆசியா-பசிபிக் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டப்படுவது 13.4 மடங்கு உயர்ந்துள்ளது என்று கூறும் இவ்வறிக்கை, இதனால், இப்பகுதிகளில் நிலத்தின் உலோகங்கள், நிலத்தடி எண்ணெய் ஆகியவை 8.6 மடங்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
இப்பகுதிகளில் நிகழும் கட்டுமானங்களில் சீனா 60 விழுக்காடும், இந்தியா 14 விழுக்காடும் அதிகமாய் ஈடுபட்டுள்ளன என்றும், இந்த அதிகப்படியான கட்டுமானங்களுக்கு இணையாக, இயற்கை வளங்கள் மீண்டும் புதுப்பிக்கப்படுவதில்லை என்றும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.








All the contents on this site are copyrighted ©.