2013-04-19 16:14:16

வத்திக்கான் : சர்க்கஸ், ஒருமைப்பாடு மற்றும் சகோதரத்துவச் செய்தியைக் கொண்டுள்ளது


ஏப்.19,2013. சர்க்கஸ் என்ற காட்சிக்கூடாரம், ஒருமைப்பாடு மற்றும் சகோதரத்துவச் செய்தியைக் கொண்டுள்ளது, இதனைத் திருஅவை பாராட்டுகின்றது என்று திருப்பீட குடியேற்றதாரர் அவைத் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò கூறினார்.
இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் 4வது அனைத்துலக சர்க்கஸ் தினத்திற்கென, உலக சர்க்கஸ் கூட்டமைப்புத் தலைவர் Urs Pilzக்குச் செய்தி அனுப்பியுள்ள கர்தினால் Vegliò, 2012ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியன்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சர்க்கஸ் கலைஞர்களுக்கு வழங்கிய செய்தி இன்னும் பசுமையாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்க்கஸ் விளையாட்டுக்களை நடத்துபவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள கர்தினால் Vegliò, போர், வன்முறை, இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் சர்க்கஸ் நடத்துவதற்குத் தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தமது பாப்பிறை தலைமைப்பணியின் தொடக்கத்தில் கூறியதுபோல அனைவரும் நம்பிக்கையின் ஒளியைப் பார்க்கவும், நம்பிக்கையை வழங்கவும் வேண்டுமெனவும் கர்தினால் Vegliò தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.