திருத்தந்தை பிரான்சிஸ் - உள்ளுக்குள்ளேயே அடைபட்டிருக்கும் திருஅவை விரைவில் நோயுறும்
ஏப்.18,2013. வெளியேச் செல்லாமல் உள்ளுக்குள்ளேயே அடைபட்டிருக்கும் திருஅவை விரைவில்
நோயுறும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். இவ்வாரம் சனிக்கிழமை முடிய Buenos
Aires நகரில் நடைபெறும் ஆர்ஜென்டினா ஆயர்கள் பேரவையின் 105வது ஆண்டு நிறையமர்வு கூட்டத்திற்கு
வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இக்கூட்டத்தில் தான் கலந்துகொள்ள
இயலாமைக்கு முதலில் வருத்தம் தெரிவித்து, தன் செய்தியைப் பகிர்ந்துகொண்டார். தண்ணீரில்
தோன்றிய தன்னுடைய பிம்பத்தையே பார்த்தவண்ணம் வாழ்வைச் செலவழித்ததாய் கிரேக்கப் புராணங்களில்
சொல்லப்படும் Narcissusஐ அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படும் Narcissism என்ற போக்கை ஓர்
எச்சரிக்கையாகச் சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, தன்னையே பார்த்து இரசிக்கும் திருஅவைக்கும்
ஆபத்து உள்ளது என்று எடுத்துரைத்தார். மக்கள் மத்தியில், அதுவும் சமுதாயத்தின் ஓரங்களில்
உள்ளவர் மத்தியில் செல்லும் திருஅவையே வாழும் வலிமை பெறும் என்றும் தன் செய்தியில் திருத்தந்தை
கூறினார். வர்த்தகச் சந்தை வளர்த்துவிட முயலும் அருள்பணி அடையாளங்களைப் புறந்தள்ளி,
உண்மையான அருள்பணியை ஆயர்கள் வளர்த்துவருவதற்குத் தன் நன்றியையும், வாழ்த்துக்களையும்
கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியுள்ள அனைத்து ஆயர்களுக்கும் தன் வாழ்த்துக்களைத்
தெரிவித்தார்.