2013-04-18 15:00:19

கற்றனைத்தூறும்.... மவுண்ட் ரஷ்மோர் தேசிய நினைவிடம்


அமெரிக்க ஐக்கிய நாட்டின் South Dakota மாநிலத்தில் Keystoneக்கு அருகிலுள்ள மவுண்ட் ரஷ்மோரில் கிரானைட் சிற்பமாக செதுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னமே மவுண்ட் ரஷ்மோர் தேசிய நினைவிடமாகும். அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர்கள் ஜார்ஷ் வாஷிங்டன் (1732–1799), தாமஸ் ஜெப்பர்சன் (1743–1826), தியோடர் ரூஸ்வெல்ட் (1858–1919), ஆபிரகாம் லிங்கன் (1809–1865) ஆகியோரின் தலைகள் 18 மீட்டர் (60 அடி) அளவில் சிற்பங்களாக இங்கு செதுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஐக்கிய நாட்டின் 150 ஆண்டுகால வரலாற்றை விவரிக்கும் விதமாக, Gutzon Borglum (1867–1941), அவரது மகன் Lincoln Borglum ஆகியோரால் இச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விருவரோடு இன்னும் 400 பணியாளர்கள் இணைந்து 1927ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி முதல் 1941ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை இச்சிற்பங்களைச் செதுக்கினர். அமெரிக்க குடியரசை பாதுகாத்தல் மற்றும் தங்களது காலத்தில் குடியரசை வலியுறுத்த பங்கு கொண்டதற்காக இந்த அரசுத்தலைவர்களை Gutzon தேர்வு செய்தார். 1,278.45 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்நினைவிடம் கடல்மட்டத்திலிருந்து 1,745மீ (5,725அடி) உயரத்தில் உள்ளது. இந்நினைவிடத்தை அமைப்பதற்கு இம்மலையிலிருந்து ஏறக்குறைய இருபது இலட்சம் டன் அளவுடைய பாறைகள் அகற்றப்பட்டன. இம்மலையிலுள்ள பாறைகள் மென்மையான மற்றும் நீடித்து உழைக்ககூடியவைகளாய் இருந்ததால் இம்மலையைத் தேர்ந்தெடுத்தார் Gutzon. இம்மலையிலுள்ள கிரானைட் பாறைகள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அழியக்கூடியவை. இந்நினைவிடத்தை அமைப்பதற்கு ஏறத்தாழ 989,992.32 அமெரிக்க டாலர் செலவிடப்பட்டன. ஆயினும், இவ்வளவு பெரிய பணியை நிறைவேற்றும்போது ஒருவரும் இறக்கவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. மவுண்ட் ரஷ்மோர் தேசிய நினைவிடத்தை ஆண்டுதோறும் ஏறக்குறைய 20 இலட்சம் பேர் பார்வையிடுகின்றனர். இப்பகுதியிலுள்ள உயரமான மலை Harney Peak ஆகும். இது 2,207 மீட்டர் (7,242அடி) உயரமுடையது.







All the contents on this site are copyrighted ©.