இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு
ஏப்.18,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று தன் பொது மறைபோதகத்தை வழங்கியபின்னர்,
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தார். கர்தினால் Cormac
Murphy O’Connor, மற்றும் பேராயர் Vincent Nichols ஆகியோர் அடங்கிய இக்குழுவினர் கடந்த
சில நாட்களாக உரோம் நகருக்கு அருகே உள்ள ஓர் இல்லத்தில் தங்கி தியானம் மேற்கொண்டனர். இப்புதன்
காலையில் ஆயர்கள் அனைவரும் புனித பேதுரு பசிலிக்காவின் கீழ்தளத்தில் அமைந்துள்ள புனித
பேதுரு கல்லறையில் திருப்பலி நிகழ்த்தியபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய
மறைபோதகத்தில் கலந்து கொண்டனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எளிமையும், மென்மையும்
பிரித்தானிய மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்றும், அவர் வார்த்தையாலும், செய்கைகளாலும்
தரும் சாட்சியங்கள் பல மக்களைக் கவர்ந்துள்ளன என்றும் Westminster பேராயர் Nichols வத்திக்கான்
வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.