ஏப்.17,2013. குழந்தைகளைத் தூங்கவைக்கும் செவிலித்தாயாகக் கருதாமல், கிறிஸ்துவின் சாட்சிகளைப்
பெற்றெடுக்கும் தாயாக திருஅவையைக் கருதவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
கூறினார். இப்புதனன்று காலை புனித மார்த்தா இல்லத்தில் காலை திருப்பலியாற்றி மறையுரை
வழங்கியத் திருத்தந்தை, புனித ஸ்தேவான் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து திருஅவைக்கு உருவான
நெருக்கடியான வரலாற்றைக் குறித்துப் பேசினார். இந்த நெருக்கடியான நேரத்தில், எருசலேமிலிருந்து
சிதறுண்ட மக்கள், தாங்களாகவே பல்வேறு நாடுகளுக்குச் சென்று, கிறிஸ்துவின் நற்செய்தியைப்
பரப்பியதையும் சுட்டிக் காட்டினார் திருத்தந்தை. அருள் பணியாளர்களும், ஆயர்களும் மட்டுமே
கிறிஸ்துவை எடுத்துரைக்க அழைக்கப்படவில்லை, மாறாக திருமுழுக்கு பெற்ற அனைவருமே கிறிஸ்துவை
அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்பதைத் தெளிவுபடுத்தியத் திருத்தந்தை, இவ்வகையில் இயங்கும்
திருஅவையே, மக்களைப் பெற்றெடுக்கும் தாயாக விளங்கும், இல்லையேல், அது குழந்தைகளைக் கண்காணிக்கும்
செவிலித்தாயாக மட்டுமே விளங்கும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார். திருமுழுக்கு
பெற்ற அனைவரும் கிறிஸ்துவைப் பறைசாற்றும் துணிவு பெறவேண்டும் என்றுரைத்தத் திருத்தந்தை,
வார்த்தையாலும், வாழ்வாலும் கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக விளங்க, திருப்பலியில் கலந்துகொண்ட
அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.