2013-04-16 15:02:54

மனிதர் மட்டுமல்ல... மனித மொழியும் குரங்கிலிருந்தே...


மனிதர்கள் மட்டுமல்ல, அவர்களின் மொழிகளும் குரங்கிலிருந்தே பரிணமித்தன என்பதைத் தெரிவிக்கும் ஆய்வு ஒன்றின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளன.
எத்தியோப்பிய காடுகளில் வாழும் பபூன் வகை (baboon) குரங்குக்கு நெருங்கிய பிரிவான கெலாடா வகை (gelada baboon) குரங்குக்கு சொந்தமான சிக்கலான குரல்கள் மனிதர்களின் ஆதிமொழியை ஒத்திருக்கலாம் என்றும், கெலாடா குரங்கின் ஒலிகள், மனிதர்களிடம் மொழிகள் தோன்றிய விதத்தை விளக்கப் பயன்படும் என்றும் உயிரியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.
Current Biology எனும் அறிவியல் இதழில் Michigan பல்கலைக்கழகத்தைச் சார்ந்த Thore Bergman என்பவர் மேற்கொண்ட புதிய ஆய்வின் முடிவுகளில் ஒன்றாக, கெலாடா குரங்குகளின் ஒலிகள், மனிதர்களின் பேச்சு ஒலிகளின் அம்சங்களுக்கு மிகவும் நெருங்கி வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்கள் பேசும்போது தாடையும், உதடும் நாக்கும் ஒரே நேரத்தில் சேர்ந்து இயங்குவதைப்போலவே, கெலாடா குரங்குகள் ஒலியெழுப்பும்போது, அவற்றின் தாடைகளும், உதடுகளும், நாக்கும் ஒரே நேரத்தில் சேர்ந்து செயற்படுவதாகவும் இந்த ஆய்வை மேற்கொண்டோர் குறிப்பிட்டுள்ளனர்.
தங்கள் ஆய்வின் அடுத்தக் கட்டமாக, கெலாடா குரங்குகளின் ஒலிகளுக்குத் தனிப்பட்ட அர்த்தம் ஏதும் இருக்கிறதா என்பதை இக்குழுவினர் ஆராயவிருக்கிறார்கள். மனிதர்கள் குழுக்களாக வாழும்போது ஒருவர் மற்றவருடன் தொடர்பு கொள்வதற்கு, மொழியைப் பயன்படுத்துவதைப் போலவே, கூட்டமாக வாழும் இந்த கெலாடா வகை குரங்குகளும் தங்களுக்குள் ஒன்றோடொன்று நெருக்கமாவதற்கு தமது வாயொலிகளைப் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஆதாரம் : wired.com








All the contents on this site are copyrighted ©.