2013-04-12 15:56:48

திருப்பீடச் செயலர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் திருத்தந்தையின் நன்றி


ஏப்.12,2013. திருப்பீடச் செயலரும், அவரது அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரும் எவ்விதப் பலனையும் எதிர்பாராமல், உளமாரச் செய்துவரும் பணிகளைப் பாராட்டுவதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி காலையில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே அவர்களது அலுவலகத்திற்குச் சென்று, அங்குள்ள அனைவரையும் தனிப்பட்ட முறையில் வாழ்த்தி, அவர்களுக்குத் தன் நன்றியைச் செலுத்தியத் திருத்தந்தை, அவர்களுடன் ஒரு மணி நேரம் செலவிட்டார்.
ஏப்ரல் 13, இச்சனிக்கிழமையுடன் தான் தலைமைப் பொறுப்பை ஏற்று ஒரு மாதம் நிறைவடையவிருப்பதால், தன் மனம் நிறைந்த நன்றியை நேரடியாகத் தெரிவிக்க வந்திருப்பதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.
திருத்தந்தையின் எதிர்பாராத வரவால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த திருப்பீடச் செயலர், கர்தினால் தர்சீசியோ பெர்தோனே, கடந்த ஒரு மாதமாக, புனித பேதுருவின் பணிகளில் உருவாகியுள்ள ஆர்வம் தங்களை இன்னும் அதிக ஈடுபாட்டுடன் உழைக்க அழைப்பு விடுக்கிறது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.