2013-04-10 16:50:53

கர்தினால் Lorenzo Antonetti இறைபதம் சேர்ந்ததையொட்டி, திருத்தந்தையின் அனுதாபத் தந்தி


இத்தாலி நாட்டின் Novara மறைமாவட்டத்தைச் சேர்ந்த கர்தினால் Lorenzo Antonetti இப்புதன் அதிகாலை இறைபதம் சேர்ந்ததையொட்டி, தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
இத்தாலியின் Novara மறைமாவட்ட ஆயர் Franco Giulio Brambilla அவர்களுக்கு அனுப்பியுள்ள இத்தந்தியில், கர்தினாலின் உறவினர்களை தான் நன்கு அறிவேன் எனக் கூறியுள்ளத் திருத்தந்தை, அவரின் உறவினர்களுக்கும், மறைமாவட்ட விசுவாசிகள் அனைவருக்கும் தன் உணர்வுபூர்வமான அனுதாபங்களை தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
90 வயது நிரம்பிய கர்தினால் Antonetti, பல நாடுகளில் திருப்பீடப் பிரதிநிதியாகவும், திருப்பீடச் செயலகத்தின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டவராகவும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் பேராலயத்தில் திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றியாவராகவும், நற்செய்திக்குச் சான்று பகர்ந்ததை தன் தந்திச் செய்தியில் குறிப்பிட்டு, பாராட்டியுள்ளார் திருத்தந்தை.
இத்தாலியின் Romagnano Sesia எனுமிடத்தில் 1922ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி பிறந்த கர்தினால் Antonetti, 1945ம் ஆண்டு குருவாகவும், 1968ம் ஆண்டு பேராயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். 1998ம் ஆண்டு திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.