ஏப்ரல் 10, 11 அயர்லாந்து தலத் திருஅவையில் சிறப்பான நினைவு நாட்கள்
ஏப்.10,2013. உலக அமைதியைக் கொணரும் முயற்சிகளைச் சிறப்பிக்கும் விதமாக, அயர்லாந்து தலத்
திருஅவை ஏப்ரல் 10, 11 ஆகிய இரு நாட்களைக் கடைபிடிக்கிறது என்று அயர்லாந்து ஆயர் பேரவையின்
நீதிப் பணிக்குழு அறிவித்துள்ளது. உலக அமைதிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உருவான
கியூபா ஏவுகணை நெருக்கடி சூழல் முடிந்து ஆறு மாதங்கள் சென்று1963ம் ஆண்டு ஏப்ரல் 11ம்
தேதி திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்கள் வெளியிட்ட Pacem in Terris, அதாவது,
'உலகில் அமைதி' என்ற சுற்று மடலின் 50ம் ஆண்டு நிறைவு இவ்வியாழனன்று கடைபிடிக்கப்படுகிறது. அயர்லாந்துக்கும்
இங்கிலாந்துக்கும் இடையே அமைதியை உருவாக்க 1998ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி, புனித வெள்ளி
ஒப்பந்தம் என்ற பெயரில் அமைதி ஒப்பந்தம் ஒன்று வெளியானது. இவ்விரு நிகழ்வுகளின் ஆண்டு
நிறைவைச் சிறப்பிக்கும் வகையில் ஏப்ரல் 10, 11 ஆகிய இரு நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது
என்று அயர்லாந்து ஆயர்கள் பேரவையின் சார்பில் அறிக்கை ஒன்று இச்செவ்வாயன்று வெளியானது.