உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்திவரும் Astalliமையத்தை திருத்தந்தை
பிரான்சிஸ் விரைவில் பார்வையிடுவார்
ஏப்.10,2013. இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழு, உரோம் நகரில் நடத்திவரும்
Astalli மையத்தை திருத்தந்தை பிரான்சிஸ் விரைவில் பார்வையிடுவார் என்று இந்த மையத்தின்
இயக்குனர் அருள் பணியாளர் Giovanni La Manna கூறினார். சரியான ஆவணங்கள் ஏதுமின்றி
இத்தாலி நாட்டுக்குள் நுழையும் பல்வேறு நாட்டினருக்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கி, அவர்களுக்குத்
தேவையான உதவிகளைச் செய்து வரும் Astalli மையத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் பார்வையிட விழைவதாக
இத்திங்கள் தொலைபேசியில் கூறினார் என்று அருள் பணியாளர் Manna CNA செய்தி நிறுவனத்திடம்
கூறினார். மத்திய கிழக்குப் பகுதியிலும், ஆப்ரிக்காவின் பல நாடுகளிலும் நிலவும் அமைதியற்றச்
சூழல்களிலிருந்து தப்பி இத்தாலி நாட்டுக்குள் நுழையும் அகதிகளுக்கு Astalli மையம் உதவிகள்
செய்கிறது என்று கூறிய அருள் பணியாளர் Manna, திருத்தந்தையின் வருகை பற்றிய செய்தி தங்களுக்கு
நம்பிக்கையும் ஊக்கமும் தருகிறது என்று குறிப்பிட்டார்.