2013-04-09 16:05:37

திருத்தந்தை பிரான்சிஸ் : பிரிட்டனின் முன்னாள் பிரதமர் தாட்சர் மனித சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு அர்ப்பணித்திருந்தவர்


ஏப்.09,2013. பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் உயிரிழந்ததையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே இத்திங்களன்று அனுப்பிய இரங்கல் செய்தியில், பிரதமர் தாட்சர் குறித்த திருத்தந்தையின் பாராட்டுகளும், அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்கான திருத்தந்தையின் செபமும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாடுகள் மத்தியில் பொதுநலமும், மனித சுதந்திரமும் ஊக்குவிக்கப்படுவதற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவர் பிரதமர் தாட்சர் என்று திருத்தந்தை பாராட்டியுள்ளார்.
இரும்புப் பெண்மணி என்று அனைத்துலக அளவில் அழைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் இத்திங்களன்று இலண்டனில் தனது 87வது வயதில் காலமானார். இவர் பிரிட்டனின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராகப் பணியாற்றியவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.