திருத்தந்தை பிரான்சிஸ் : சூனியக்காரர்களும் குறிசொல்பவர்களும் மீட்பளிக்க முடியாது,
இயேசு மட்டுமே மீட்பளிப்பவர்
ஏப்.05,2013. இன்று பலர் தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, சூனியக்காரர்கள்
மற்றும் குறிசொல்பவர்களிடம் செல்கிறார்கள், ஆனால், நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிக்கக்கூடியவர்
இயேசு ஒருவர் மட்டுமே, இதற்கு நாம் சாட்சியாகத் திகழ வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை
பிரான்சிஸ். வத்திக்கானின் புனித மார்த்தா இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில் வத்திக்கானின்
மருந்தக மற்றும் சில வத்திக்கான் பணியாளர்களுக்கு இவ்வெள்ளி காலைத் திருப்பலி நிகழ்த்தி
மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார். பிறவியிலேயே கால் ஊனமுற்றவருக்குப்
புனித பேதுரு இயேசுவின் பெயரால் குணமளித்த புதுமை குறித்து விளக்கிய திருத்தந்தை, இன்று
உலகு பல மீட்பாளர்களை வழங்குகின்றது, ஆனால் இயேசுவின் பெயரால்மட்டுமே மீட்பு உண்டு என்பதை
வலியுறுத்திப் பேசினார். Buenos Aires பேராயர் இல்லத்தில் 30 ஆண்டுகளாக வேலை செய்யும்
ஒருவர் வேலையைத் தொடங்குவதற்கு முன்னரும், வேலையை முடிக்கும்போதும் இயேசு என்று உச்சரிப்பதைக்
கண்டு அவரிடம் இதற்கான காரணத்தைக் கேட்டேன், அவரோ, இயேசு என்ற பெயரை உச்சரிக்கும்பொழுது
வேலை செய்ய சக்தியைப் பெறுகிறேன், இயேசு என் அருகிலே இருக்கிறார், அவர் என்னை எப்பொழுதும்
பாதுகாப்பதுபோல் உணருகிறேன் என்று அவர் பதில் சொன்னார் என்பதையும் மறையுரையில் பகிர்ந்து
கொண்டார் திருத்தந்தை. இந்த மனிதர் இறையியல் படித்தவரல்ல, ஆனால் திருமுழுக்கின் அருளாலும்
தூய ஆவியின் வல்லமையாலும் மட்டும் வாழ்பவர் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவின்
பெயரில் மட்டுமே மீட்பு உண்டு என்று கூறினார்.