2013-04-04 15:52:02

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அர்ஜென்டினா மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அனுதாபத் தந்தி


ஏப்.04,2013. மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கும் அர்ஜென்டினா மக்களுக்கு தன் அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்து திருத்தந்தை பிரான்சிஸ் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
திருத்தந்தையின் பெயரால், Buenos Aires பேராயர் Mario Aurelio Poli அவர்களுக்கு திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அனுப்பியுள்ள இத்தந்தியில், வெள்ளத்தில் இறந்தோர் இறைவனின் நித்திய இளைப்பாற்றியில் இணைய வேண்டுமென்ற செபமும், பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் திருஅவை நிறுவனங்கள் இத்தருணத்தில் முழு வீச்சுடன் செயல்பட ஊக்குவிக்கும் திருத்தந்தையின் இத்தந்தியில், நல்மனம் கொண்டோர் அனைவரும் தாராளமாக நிதி உதவிகள் செய்யவும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இறைவன் நம்மீது அன்பு கொண்டுள்ளார். அவரை அன்பு செய்ய நாம் அஞ்சக்கூடாது. நமது நம்பிக்கை அன்பு நிறைந்த வார்த்தைகளாலும், செயல்களாலும் வெளிப்பட வேண்டும் என்ற Twitter செய்தியை இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் – வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.