2013-04-04 15:52:09

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் பொது நிகழ்ச்சிகள்


ஏப்.04,2013. ஏப்ரல் மே ஆகிய இரு மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் பொது நிகழ்ச்சிகளின் பட்டியல் ஒன்று திருப்பீடத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 7ம் தேதி, வருகிற இறை இரக்க ஞாயிறன்று உரோம் நகரில் உள்ள புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் மாலை 5.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரின் ஆயர் என்ற பொறுப்புடன் அந்தப் பேராலயத்தின் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அங்கு திருப்பலியாற்றுவார்.
ஏப்ரல் 14ம் தேதி ஞாயிறன்று உரோம் நகரின் சுவர்களுக்கு அருகே அமைந்துள்ள புனித பவுல் பசிலிக்காவில் மாலை 5.30 மணிக்கு, திருப்பலி ஆற்றும் திருத்தந்தை, அதற்கு அடுத்த நல்லாயன் ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் காலை 9.30 மணிக்கு அருள் பணியாளர்களை திருநிலைப்படுத்துவார்.
ஏப்ரல் 28ம் தேதி ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் காலை 10 மணிக்கு இளையோருக்கு உறுதிப்பூசுதல் வழங்கும் திருப்பலியை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவேற்றுவார்.
அன்னை மரியாவுக்கென ஒப்படைக்கப்பட்டுள்ள மே மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தில் செபமாலையை வழிநடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ், அடுத்த நாள் ஞாயிறன்று காலை 10 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் அனைத்து பக்த சபைகளின் உறுப்பினர்களுக்குச் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றுவார்.
மே மாதம் 12ம் தேதி ஞாயிறன்று முத்திப் பேறு பெற்ற பலரை புனிதர்களாக உயர்த்தும் திருப்பலியை புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் நிறைவேற்றுவார்.
திருஅவையின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பினருக்கு மே மாதம் 18ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருவிழிப்புச் சடங்கையும், அடுத்த நாள் பெந்தகோஸ்தே பெருவிழாவன்று காலை 10 மணிக்கு இவ்வமைப்பினருக்குச் சிறப்புத் திருப்பலியையும் நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் – வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.