ஏப்.03,2013. நமது கண்ணீர் என்ற கண்ணாடியின் வழியாக இயேசுவை நாம் தெளிவாகக் காணமுடியும்
என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்று மகதலா மரியா
சொன்ன வார்த்தைகளை மையப்படுத்தி இச்செவ்வாய் காலைத் திருப்பலியை புனித மார்த்தா இல்லத்தில்
உள்ள சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருத்தந்தை இவ்வாறு கூறினார். சமுதாயத்தால் தவறாகப்
பயன்படுத்தப்பட்ட பெண்ணாக, பாவத்தில் வாழ்ந்த மகதலா மரியா, இயேசுவைக் கல்லறையில் காணாததால்
வடித்தத் துயரக் கண்ணீர், இயேசுவை அடையாளம் கண்டு கொண்டதும் ஆனந்த கண்ணீராக மாறியது என்பதைக்
குறிப்பிட்டத் திருத்தந்தை, கண்ணீருக்கு உள்ள வலிமையை எடுத்துரைத்தார். நாம் ஒவ்வொருவரும்
துயரிலும், மகிழ்விலும் வடிக்கும் கண்ணீருக்கு மதிப்பு உள்ளது என்றும், பல நேரங்களில்
கண்ணீரின் வழியாகக் கடவுளைத் தெளிவாகக் காணமுடியும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தன்
மறையுரையில் குறிப்பிட்டார். ஆதாரம் – வத்திக்கான் வானொலி