2013-04-03 16:09:45

தாழ்ச்சி, கருணை ஆகிய நற்பண்புகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு திருத்தந்தையை வழங்கியதற்காக கடவுளுக்கு நன்றி - வியட்நாம் கர்தினால்


ஏப்.03,2013. தாழ்ச்சி, கருணை ஆகிய நற்பண்புகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு திருத்தந்தையை வழங்கியதற்காக கடவுளுக்கு நன்றி என்று வியட்நாம் கர்தினால் Jean-Baptiste Pham Minh Man கூறினார்.
Ho Chi Minh நகரில் உள்ள Notre Dame பேராலயத்தில் உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியை தலைமையேற்று நடத்திய கர்தினால் Pham Minh Man, 28 பேருக்கு திருமுழுக்கு வழங்கினார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
திருப்பலியின் இறுதியில் கூடியிருந்த 2000க்கும் அதிகமான மக்களுக்கு புதியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவம் பதித்த படம் ஒன்றை வழங்கிய கர்தினால் Pham Minh Man, அப்படத்தின் பின்புறம் அச்சடிக்கப்பட்டுள்ள சிறு செபத்தை திருத்தந்தைக்காக செபிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
மத நம்பிக்கையற்ற வழிகளில் வளர்ந்துவரும் உலகில், தாங்கள் இன்னும் அதிக நம்பிக்கையுடன் வாழ புதிய திருத்தந்தையின் வழியாக இறைவன் அழைப்பதைப்போல் உணர்கிறோம் என்று இத்திருப்பலியில் கலந்துகொண்ட பீட்டர் என்ற இளைஞர் ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் - AsiaNews








All the contents on this site are copyrighted ©.