வறட்சி பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள் என்கிறார் மும்பை கர்தினால்
ஏப்.02,2013. மகராஷ்டிரா மாநிலத்தின் வறட்சி பிரச்சனை குறித்தும் மும்பை அரசு மருத்துவமனைகளில்
குழந்தைகள் இறப்பு அதிகரிப்பு குறித்தும் பொதுமக்கள் தங்கள் கவனத்தைத் திருப்பவேண்டும்
என அழைப்புவிடுத்துள்ளார் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேஷியஸ். பசிச்சாவுகளுக்கும்
தற்கொலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடிய வறட்சி அச்சுறுத்தல்களிலிருந்து விவசாயிகளைக்
காக்க வேண்டியது நம் கடமையாகிறது என தன் அறிக்கையில் கூறியுள்ள கர்தினால் கிரேஷியஸ்,
நீர் சேமிப்பு மற்றும் உடனடி நிவாரணப்பணிகள் என்பவை போர்க்கால நடவடிக்கை போல் ஏற்று நடத்தப்பட
வேண்டும் என அதில் அழைப்பு விடுத்துள்ளார். நகர அதிகாரிகளின் பொறுப்பற்ற போக்கினால்
பொது மருத்துவமனைகளில் குழந்தைகளின் இறப்பு அதிகரித்துவருவது குறித்தும் உடனடி கவனம்
செலுத்தப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் கர்தினால் கிரேஷியஸ். மும்பை நகரின்
கிறிஸ்தவ சமூகம் 'அநீதிகளை எதிர்த்துப் போராடுவோம்' என இந்த உயிர்ப்பு விழாவின்போது தீர்மானம்
ஒன்றை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.