ஏப்.02,2013. பெங்களூருவின் தூய பேதுரு குருமட அதிபர் கொலையுண்டது குறித்து தன் அதிர்ச்சியையும்
அனுதாபங்களையும் தெரிவித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் பெங்களூரு பேராயர் பெர்னார்டு
மொராஸ். இம்மாதம் முதல் தேதி இடம்பெற்ற குருமட அதிபர் கே.ஜே. தாமசின் கொலை குறித்து
காவல்துறையின் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும், அவரின் அடக்குச்சடங்கு குறித்து அவர்
சார்ந்திருக்கும் ஊட்டி மறைமாவட்டமே முடிவெடுக்கும் எனவும் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்
பேராயர். எளியவராகவும், எவருக்கும் துன்பம் விளைவிக்காதவராகவும், பக்தி நிறைந்தவராகவும்
விளங்கிய குருமட அதிபரின் மரணம் அனைவருக்கும் பெரும் இழப்பு எனவும் கூறியுள்ள பேராயர்
மொராஸ், இக்கொலையை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். கேரளாவில் பிறந்து
ஊட்டி மறைமாவட்டத்தில் குருவான குரு.கே.ஜே. தாமஸ், தற்போது இரண்டாவது முறையாக அதிபர்
பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.