ஏப்.01,2013. மியான்மார் நாட்டின் மத்தியப்பகுதியில் அமைதி நிலவ, அந்நாட்டின் முஸ்லீம்
மற்றும் புத்த மதத்தவரிடையே நடைபெறும் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் என அழைப்பு விடுத்தார்
அந்நாட்டு யங்கூன் பேராயர். பலரின் உயிரிழப்புக்கும் பல வீடுகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களின்
சேதமடைதலுக்கும் காரணமான அண்மை வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் என தன் அறிக்கையில் அழைப்பு
விடுத்துள்ள யங்கூன் பேராயர் சார்லஸ் போ, அன்பும் இரக்கமும் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவை
என்பதையும் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு மதத்தவரும் ஒருவருக்கொருவர் செவிமடுத்து
ஒன்றிணைந்த நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்பது இன்றைய சூழலில் அவசரமானதும் அத்தியாவசியமானதும்
என பேராயர் விடுத்திருந்த அழைப்பை மியான்மாரின் கிறிஸ்தவ, இஸ்லாம், புத்த மற்றும் இந்து
இளைய தலைமுறையினர் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் 20ம் தேதி Meikhtila
எனுமிடத்தில் இஸ்லாமியர்களுக்கும் புத்த மதத்தினர்களுக்கும் இடையே துவங்கிய வன்முறைகளால்
இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர், 37 சமய நிறுவனக் கட்டிடங்களும், 1227 வீடுகளும் சேதமடைந்துள்ளன.