புனித வியாழன் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்திய புனித
எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியும், மறையுரையும்
மார்ச்,28,2013. புனித வியாழன் காலை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் காலை 9.30
மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை தலைமையேற்று
நடத்தினார். புனித வியாழன் என்பது, அருள் பணியாளர்களுக்கு உரிய சிறப்பு நாள் என்பதால்,
பசிலிக்காப் பேராலயம் கர்தினால்கள், ஆயர்கள் ஆகியோருடன், ஆயிரக்கணக்கான அருள் பணியாளர்களால்
நிறைந்திருந்தது. பசிலிக்காவில் மக்கள் கூட்டமும் நிறைந்திருந்ததால், தொடந்து பெய்த மழையையும்
பொருட்படுத்தாமல், பேராலய வளாகத்திலும் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. இத்திருப்பலியில்
அருள் பணியாளர்களுக்கென குறிப்பிட்ட வகையில் திருத்தந்தை வழங்கிய மறையுரை இதோ:
அன்பு
சகோதர, சகோதரிகளே,
புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை
உரோமையின் ஆயராக, முதன்முறையாகக் கொண்டாடுவதில் நான் மகிழ்வடைகிறேன். அனைவரையும்,
சிறப்பாக, என் அன்பு குருக்களே உங்களையும் வாழ்த்துகிறேன். என்னைப்
போலவே நீங்களும் இன்று உங்கள் குருத்துவ அருள்பொழிவை நினைவுகூருகிறீர்கள்.
இன்று
நாம் வாசித்த வாசகங்களும், திருப்பாடலும் கடவுளின் 'அருள்பொழிவு
பெற்றவர்களை'ப்பற்றி பேசுகிறது - எசயா கூறும் யாவேயின் துன்புறம் ஊழியன்,
அரசன் தாவீது, மற்றும் நம் ஆண்டவர் இயேசு. இவர்கள் மூவருக்கும்
பொதுவான ஓர் அம்சம் உள்ளது, அதாவது, கடவுளின் ஊழியர்களாக
இவர்கள் இருப்பதால், மக்களை, சிறப்பாக, ஏழைகள், சிறையில்
அடைக்கப்ப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் இவர்களை அருள்பொழிவு செய்வதற்கே இவர்கள்
அருள்பொழிவு பெற்றுள்ளனர். அருள்பொழிவு பெற்றவர்கள் மற்றவர்களுக்காக வாழ்பவர்கள் என்பதை
நாம் உணர இன்றைய திருப்பாடலில் அழகியதோர் உருவகம் உள்ளது: “ஆரோனின் தலையினிலே
ஊற்றப்பெற்ற நறுமணத்தைலம் அவருடைய தாடியினின்று வழிந்தோடி அவருடைய அங்கியின் விளிம்பை
நனைப்பதற்கு ஒப்பாகும்.” (தி.பா. 133:2). ஆரோனின் தாடியினின்று வழிந்தோடும்
நறுமணத்தைலம் அருள் பணியாளரின் அருள்பொழிவுக்கு அழகிய உருவகம். வழிந்தோடும் தைலம் அருள்பொழிவு
செய்யப்பட்டுள்ள கிறிஸ்துவின் வழியாக உலகின் எல்லைகளுக்கு செல்லவேண்டும் என்பதை அங்கி
என்ற உருவகம் சொல்கிறது.
தலைமைக் குரு உடுத்தும் புனித உடைகள் பல செறிவு
மிகுந்த அடையாளங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று இது: இஸ்ரயேல் மக்களின் பெயர்கள்
பதிந்த இரு கற்பலகைகள் தலைமைக் குரு தோளில் அணிந்த உடையாக இருந்தது. இதுவே இன்று குருக்கள்
அணியும் திருப்பலி உடைகளின் ஒரு பகுதியாக உள்ளது. அதேபோல், தலைமைக் குரு மார்புக் கவசம்போல்
அணிந்த உடையிலும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
அருள் பணியாளர் திருப்பலி உடைகளை அணியும்போது, தன் தோளிலும் மார்பிலும்
மக்களின் பெயர்களைத் தாங்கிச் செல்கிறார் என்பதே இந்த அடையாளத்தின் பொருள். நாம் திருப்பலி
உடைகளை அணியும்போது, நம் மக்களை, அவர்களது பாரங்களை நமது
இதயங்களில், தோள்களில் ஏந்திச் செல்வதாக உணரவேண்டும்.
திருவழிபாட்டின்
அடையாளங்களாக விளங்கும் இப்பொருட்கள் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்கள் மட்டுமல்ல,
கடவுளின் புகழ் வெளிப்படும் மக்களை அடையாளப்படுத்தும் பொருட்கள். இப்பொருட்களிலிருந்து
அருள் பணியாளரின் செயல்களின் மேல் நம் கவனம் திரும்பட்டும். ஆரோன் மீது ஊற்றப்பட்ட தைலம்
நறுமணம் தருவதற்கு மட்டும் ஊற்றப்படவில்லை, விளிம்புகளை நனைப்பதற்கும்
ஊற்றப்பட்டது. ஆண்டவர் இதனை மிகத் தெளிவாகக் கூறுவார்: ஏழைகளுக்காக, சிறைப்பட்டோருக்காக,
நோயுற்றோருக்காக, தனிமையில் துன்புறுவோருக்காக அவரது அருள் பொழிவு
வழங்கப்பட்டது. அருள் பொழிவுத் தைலம் நறுமணத்தைத் தருவதற்காக மட்டும் பயன்படக்கூடாது,
முக்கியமாக, அது குடுவைகளில் அடைபட்டு, பயனற்றுப் போவதற்காக உருவாக்கப்பட்ட
தைலம் அல்ல. அதேபோல், மனதில் கசப்புடன் வாழ்வதற்கு நாம் அருள்பொழிவு செய்யப்பட்டவர்கள்
அல்ல.
மக்கள் எவ்விதம் அருள்பொழிவு பெற்றுள்ளனர் என்பதைக் கொண்டே ஒரு நல்ல
அருள் பணியாளரை நாம் அடையாளம் காணமுடியும். மகிழ்வின் தைலத்தால் மக்கள் அருள்பொழிவு செய்யப்பட்டிருந்தால்,
அது வெளிப்படையாகத் தெரியும்: எடுத்துக்காட்டாக, திருப்பலியை விட்டு
அவர்கள் வெளியேச் செல்லும்போது, அவர்கள் நல்ல செய்தியை கேட்டனரா என்பதை
அவர்களைப் பார்த்தே தெரிந்துகொள்ளலாம். உத்வேகத்துடன் நற்செய்தி அறிவிக்கப்படுவதையே நம்
மக்கள் விரும்புகின்றனர்; அவர்கள் அன்றாட வாழ்வைத் தொடும்படி நம் மறையுரைகள்
அமைவதையே மக்கள் விரும்புகின்றனர். ஆரோனின் தலையில் ஊற்றப்பட்ட தைலம், அவரது
அங்கியின் விளிம்பையும் நனைத்ததுபோல், நமது நற்செய்தி அறிவிப்பு, மக்களின்
இருளான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். பல்வேறு தீய சக்திகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி,
தங்கள் விசுவாசத்தை இழக்கும் அளவு விளிம்புகளில் வாழ்பவர்களிடையே நமது நற்செய்தி
சென்றடைய வேண்டும். மக்களின் அன்றாட வாழ்வில் நிகழும் எதார்த்தங்களுக்காகவும்,
அவர்களது இன்ப, துன்பங்கள், நம்பிக்கைகள்,
பாரங்கள் அனைத்திற்காகவும் நாம் வேண்டிக்கொள்வதால், அவர்கள் நமக்கு
நன்றி சொல்கின்றனர். அருள்பொழிவு செய்யப்பட்ட கிறிஸ்துவின் நறுமணம் நம் வழியாக அவர்களைச்
சென்றடைவதை மக்கள் உணரும்போது, நம் மட்டில் அதிக நம்பிக்கை கொள்கின்றனர்.
அவர்களது தேவைகளை நம்மிடம் கூறி, "எனக்கு இந்தப் பிரச்சனை உள்ளது,
எனக்காக இறைவனிடம் மன்றாடுங்கள்", "என்னை ஆசீர்வதியுங்கள்" என்று
அவர்கள் சொல்லும்போது, அருள்பொழிவின் தைலம் அவர்களையும் சென்றடைந்துள்ளது
என்பதை உணரலாம். இறைவனுக்கும், மக்களுக்கும் இடையே இத்தகைய உறவை நாம் கொண்டிருக்கும்போது,
நம் வழியாக அருள் அவர்களைச் சென்றடையும்போது, இறைவனுக்கும்,
மனிதருக்கும் இடையே நாம் ஓர் இணைப்பாக அமைகிறோம். இத்தருணத்தில் ஒரு
முக்கிய கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன். அதாவது, நம்மிடம் மக்கள் கேட்கும்
செபங்கள், சில சமயங்களில் உலகு சார்ந்த விண்ணப்பங்களாய், நமக்குச்
சங்கடமான விண்ணப்பங்களாய் இருந்தாலும், அவை, இறை அருளை நமக்குள்
தூண்டியெழுப்ப வேண்டும். அருள்பொழிவு தைலத்தின் நறுமணம் நம்மிடையே உள்ளதென்பதை மக்கள்
உணர்வதாலேயே அவர்கள் நம்மிடம் வருகின்றனர். இரத்தப் போக்கினால் துன்புற்ற பெண்,
இயேசுவின் ஆடை விளிம்பைத் தொட்டபோது, நம்பிக்கை நிறைந்த அவரது துயரத்தை
இயேசு உணர்ந்தார். இந்த நிகழ்வில், நெருக்கிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்துடன்
இயேசு சென்றதை, ஆரோனின் அங்கி என்ற அழகிய உருவகத்தின் ஓர் எடுத்துக்காட்டென
நாம் உணரலாம். இந்த அங்கி என்ற உருவகம் அனைவருக்கும் புலனாவதில்லை. விசுவாசக் கண்கொண்டு
நோக்குபவர்களுக்கே அது புலனாகும். அத்தகைய கண்ணோட்டம், இரத்தப் போக்குடைய அப்பெண்ணிடம்
இருந்தது. மற்ற மக்களிடமோ, எதிர்காலத்தில் அருள் பணியாளர்களாக மாறிய சீடர்களிடமோ,
அக்கண்ணோட்டம் இல்லை. அவர்கள் மேலோட்டமான பார்வையுடன் கூட்டத்தை மட்டுமே கண்டனர் (லூக்கா
8:42). இதற்கு மாறாக, இயேசுவோ, அருள்பொழிவு சக்தி தன் ஆடையின்
விளிம்பிலிருந்து வெளிப்பட்டதை உணர்ந்தார்.
நமது அருள்பொழிவின் சக்தியையும்
நாம் உணரவேண்டுமெனில், நாமும் 'வெளியே செல்ல' வேண்டும்.
விளிம்புகளுக்குச் செல்ல வேண்டும். துன்பம், இரத்தம் சிந்துதல்,
பார்வையற்ற நிலை, தீய சக்திகளால் சிறைப்பட்டிருக்கும் நிலை ஆகிய
விளிம்புகளுக்குச் செல்லவேண்டும். நம்மை நாமே ஆய்வு செய்வதில், நமது உள்நோக்கிய
பார்வையில் நாம் ஆண்டவரைச் சந்திக்க இயலாது. தன்னைத் தானே முன்னேற்றிக் கொள்ளும் வழிமுறைகள்
பயனுள்ளவைதான். ஆனால், இந்த பயிற்சிகளிலேயே மூழ்கிப்போய், ஒரு
பயிற்சியிலிருந்து மற்றொரு பயிற்சிக்குத் தாவிக் கொண்டிருந்தால், இறையருளின்
சக்தியை மறுத்து, நமது சொந்த முயற்சிகளிலேயே கவனம் செலுத்திய Pelagianகளின்
நிலைக்கு நாம் மாறுவோம். அதற்கு மாறாக, மக்கள் மத்தியில் சென்று,
அங்கு நம்மிடம் உள்ள அருள்பொழிவு தைலம் சிறிதளவேயாயினும், அதனை
ஒன்றுமேயில்லாதவர்களோடு நாம் பகிர்ந்து கொள்வோம்.
மக்கள் மத்தியில் செல்லாத
அருள் பணியாளர், தன் குருத்துவ இதயத்தைத் தூண்டியெழுப்பக் கூடிய மக்களிடமிருந்து
கிடைக்கும் சிறந்த எண்ணங்களை இழக்கிறார். தங்களைவிட்டு வெளியேறாத அருள் பணியாளர்கள்,
இறைவனையும் மக்களையும் இணைப்பவர்களாக இல்லாமல், இடைத்தரகர்களாக,
மேலாளர்களாக மாறி விடுகின்றனர். இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிவோம்.
மேலாளர் அல்லது இடைத்தரகர் "தனது சன்மானத்தை ஏற்கனவே பெற்றுவிட்டவர்". இவர் தன் இதயத்தையோ,
வாழ்வையோ மக்களுக்கு முன் ஒப்படைக்காததால், அவர்களின் மனம் நிறைந்த
நன்றியை ஒருபோதும் பெறுவதில்லை. ஒரு சில அருள் பணியாளர்கள் மனமிழந்து, விரக்தியாவதற்கு
இதுவே காரணம். "ஆடுகளின் மணத்துடன்" ஆடுகள் மத்தியிலேயே வாழும் மக்களின் மேய்ப்பர்களாக,
மக்களைப் பிடிக்கும் மீனவர்களாக இருப்பதற்குப் பதிலாக, பழமையானவற்றையும்,
புதியவற்றையும் சேகரிப்பவர்களாக இவ்வருள் பணியாளர்கள் வாழ்கின்றனர். அருள்
பணியாளர்களின் தனித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால்,
இந்தத் தாக்குதலை எதிர்கொண்டு, ஆண்டவரின் பெயரால் நாம் தொடர்ந்து
வலைகளை வீச முடியும். இன்றைய உலகச் சூழலில், "இன்னும் ஆழத்திற்குச் செல்ல"
நாம் அழைக்கப்படுகிறோம். நமது செயல்பாடுகளில் நம்பிக்கை கொள்ளாமல், இறைவனின்
அருள்போழிவில் நம்பிக்கை கொண்டு, நாம் வலைகளை வீசினால், அபரிமிதமான
மீன்கள் வலையில் விழும் என்பதை நாம் நம்பலாம்.
அன்பு இறைமக்களே,
உங்கள் அன்பாலும், செபங்களாலும் அருள் பணியாளர்களுடன் நெருங்கியிருங்கள்.
அப்போதுதான், இறைவனின் இதயத்திற்கேற்ப நல்ல மேய்ப்பர்களாக இவர்கள் விளங்க
முடியும்.
அன்பு அருள் பணியாளர்களே, அருள்பொழிவு செய்யப்பட்டுள்ள
நம்மை, தூய்மையின் ஆவியால் தந்தையாம் இறைவன் மீண்டும் புதுப்பிப்பாராக.
நமது அருள்பொழிவு, விளிம்புவரை சென்று, அங்கு தேவையில் உள்ளோரை
அருள்பொழிவு செய்ய இறை ஆவியார் நம்மைப் புதுப்பிப்பாராக. நாம் ஆண்டவரின் சீடர்கள் என்பதையும்,
அருள் பணியாளர் என்ற முறையில் நாம் அணியும் உடைகள் மீது மக்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன
என்பதையும், இவற்றைத் தவிர, வேறு எவ்வகைத் தனித்துவத்தையும்
நாம் தேடாதவர்கள் என்பதையும் மக்கள் உணர்வார்களாக. அருள் பொழிவு செய்யப்பட்ட இயேசுவின்
மகிழ்வுத் தைலத்தை நமது சொற்களாலும், செயல்களாலும் மக்கள் பெறுவார்களாக.
ஆமென். ஆதாரம் – வத்திக்கான் வானொலி