மும்பை நகரில் 7 கிலோமீட்டர் நீளத்திற்கு இயேசுவின் பாடுகளைக் குறிக்கும் ஊர்வலம்
மார்ச்,27,2013. புனித வெள்ளியன்று மும்பை நகரின் பல பகுதிகள் வழியே 7 கிலோமீட்டர் நீளத்திற்கு
இயேசுவின் பாடுகளைக் குறிக்கும் ஓர் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. CSF
எனப்படும் கத்தோலிக்க மதசார்பற்ற அமைப்பின் தலைமைச் செயலர் ஜோசப் டயஸ் அவர்களால் துவக்கப்பட்ட
இம்முயற்சி, 26வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அவ்வமைப்பினர் அறிவித்துள்ளனர். மும்பை
நகரின் மேற்கு Khar பகுதியில் உள்ள திரு இருதயக் கோவிலில் துவங்கும் இந்த பக்தி முயற்சி,
Santacruz, Vakola, Kalina ஆகிய பகுதிகள் வழியேச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர்
பங்கேற்கும் இந்த ஊர்வலத்தில் ஆங்காங்கே கிறிஸ்துவின் பாடுகளில் இடம்பெற்ற சில நிகழ்ச்சிகளை
இளையோர் குழுவினர் அரங்கேற்றுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தின் பல்வேறு
அநீதிகளும், குறிப்பாக, கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் பல்வேறுதுயரங்களும் இந்த ஊர்வலத்தின்போது
அரங்கேற்றப்படும் என்று CSF செயலர் ஜோசப் டயஸ் கூறியுள்ளார்.