திருப்பீடம் ஐ.நா.வில் : மனிதரை மையப்படுத்திய ஆயுத வியாபார உடன்பாடு கொண்டுவரப்படுமாறு
வலியுறுத்தல்
மார்ச்,26,2013. மனிதாபிமான அல்லது மனித உரிமைச் சட்டங்கள் மீறப்படும்போது இடம்பெறும்
ஆயுதப் பரிமாற்றங்கள் தடைசெய்யப்படுமாறு, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர்
பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் கேட்டுக்கொண்டார். ஆயுத வியாபார உடன்பாடு குறித்த
ஐ.நா.வின் கடைசிக் கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் சுள்ளிக்காட், மனிதரை மையப்படுத்திய
உடன்பாடு கொண்டுவரப்படுமாறு திருப்பீடம் எப்பொழுதும் வலியுறுத்தி வருகின்றது என்று கூறினார். ஆயுதங்களை
வாங்கும் நாடுகள் அவற்றை அப்பாவி குடிமக்களுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றன என்றுரைத்த
பேராயர் சுள்ளிக்காட், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், புலம்பெயர்ந்தவர்கள்,
குடியேற்றதாரர்கள், நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்துள்ளவர்கள், பெண்கள், ஆண்கள் என சமுதாயத்தில்
நலிந்தவர்கள் பாதுகாக்கப்படுமாறு கேட்டுக்கொண்டார். ஆயுத வியாபார உடன்பாடு குறித்த
ஐ.நா.வின் கடைசிக் கருத்தரங்கு வருகிற வியாழனன்று நிறைவடையும். ஆதாரம் : வத்திக்கான்
வானொலி