மார்ச்,26,2013. சிலுவையில் அறையப்படுதல், தன்னையே கசையால் அடித்துக்கொள்ளுதல் உட்பட
புனித வெள்ளியன்று இடம்பெறும் கடுமையான தபச் செயல்கள் குறித்து விசுவாசிகளை எச்சரித்துள்ளனர்
பிலிப்பீன்ஸ் ஆயர்கள். புனித வாரத்தைச் சிறப்பிப்பதற்குச் செபங்கள் போன்ற நேர்த்தியான
வழிகள் உள்ளன என்பதால், விசுவாசிகள் செபத்தில் அதிகம் கவனம் செலுத்துமாறு கேட்டுள்ள ஆயர்கள்,
ஒருவரின் மனமாற்றமே, புனித வாரத்தின் உண்மையான உணர்வை வெளிப்படுத்தும் என்று கூறியுள்ளனர். மேலும்,
உண்மையான மனமாற்றத்துக்கு இட்டுச்செல்லும் வேறுவகையான தியாகங்கள் இருக்கன்றன என விசுவாசிகளுக்கு
நினைவுபடுத்தியுள்ளார் பிலிப்பீன்ஸ் ஆயர்கள் பேரவையின் இளையோர் பணிக்குழுத் தலைவர் ஆயர்
Joel Baylon. இதற்கிடையே, புனித வெள்ளியன்று குறைந்தது 24 “தபசிகள்” சிலுவையில் அறையப்படுவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுவதாக, பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். தங்கள் பாவங்களுக்குப்
பரிகாரம் செய்து கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெறும் ஒரு தபச் செயலாக, பிலிப்பீன்ஸில் ஆண்டுதோறும்
புனித வெள்ளியன்று இது இடம்பெற்று வருகின்றது. ஆதாரம் : UCAN